செவ்வாய், 29 மே, 2018

போலீஸ் வீடு வீடாக தேடி வேட்டையாடுகிறது ... பன்னீரும் எடப்படியும் அப்பாவி வேஷம்


 சென்னை,வீடு,தமிழக போலீசார்,வேட்டை!
 சென்னை,வீடு,தமிழக போலீசார்,வேட்டை!

தினமலர் :துாத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறையை துாண்டி விட்டு 16 வயது சிறுமி உட்பட 13 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த 'போர்வையாளர்'களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்.
சென்னையில் அவர்களுக்கு அடைக்கலம் தந்துள்ள புள்ளிகளின் வீடுகளில் ரகசிய தகவல் அடிப்படையில் தீவிர சோதனை நடந்து வருகிறது. 'தலை' கைதாகி இருப்பதால் 'கெத்து' பிரசாரம் செய்த பலரும் போலீஸ் வலையில் சிக்குகின்றனர். இதனால் செய்வதறியாமல் அவர்கள் 'கிலி' அடைந்துள்ளனர்.
துாத்துக்குடி 'சிப்காட்' வளாகத்தில் உள்ள 'ஸ்டெர்லைட்' ஆலையை மூட வேண்டும் என குமரெட்டியாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள 17 கிராமங்களைச் சேர்ந்தோர் 100 நாட்களுக்கு முன் போராட்டத்தை துவக்கினர். 100வது நாளான 22ம் தேதி பேரணியாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க முயன்றனர்.
அவர்களுடன் போராட்டக்காரர்கள் போல ஊடுருவிய 'நக்சலைட்' ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த சமூக விரோதிகள், கலெக்டர் அலுவலகத்தை சூறையாடினர்; வாகனங்களுக்கு தீ வைத்தனர். தடுக்க முயன்ற போலீசாரை 'கொரில்லா' படை போல சூழ்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இவர்களின் பிடியில் இருந்து போலீசாரை காப்பாற்ற துப்பாக்கி சூடு நடத்தியதில் 16 வயது சிறுமி உட்பட 13 பேர் பலியாகினர்.


இதை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸ்
அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர். மேலும் இந்த சமூக விரோதிகள் தான் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் நடந்த 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்திற்கு எதிரான போராட்டம் போன்றவற்றில் ஊடுருவி வன்முறையை துாண்டி உள்ளனர்.

அதேபோல் சேப்பாக்கத்தில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது என நடந்த போராட்டத்திலும் வன்முறையை துாண்டியுள்ளனர். இந்த 'போர்வையாளர்'கள் தான், துாத்துக்குடி வன்முறைக்கும்காரணம் என்பது தெரிய வந்துள்ளது. அதற்கான 'வீடியோ' ஆதாரங்களை போலீஸ் உயர் அதிகாரிகள் திரட்டியுள்ளனர்.

இவர்களுக்கு சென்னையில் உள்ள சில அரசியல் புள்ளிகள் அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். சட்ட ரீதியாக உதவி செய்ய தனிப்பிரிவு செயல்படுவதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் இந்த சமூக விரோதிகள் சென்னை, மதுரை, கோவை என மக்கள் நெருக்கடி மிகுந்த நகரங்களில் பதுங்கி இருப்பதை மத்திய, மாநில உளவு போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களை வேட்டையாடும் பணி தீவிரமாக நடக்கிறது.

சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் முக்கிய புள்ளிகளும், ரகசிய கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். வன்முறையை துாண்டும், 'கெத்து' பேச்சாளர்களின் பட்டியலையும், போலீசார் தயாரித்து உள்ளனர். முக்கிய புள்ளி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் மத்தியில், 'கிலி' ஏற்பட்டுள்ளது. 'போர்வையாளர்கள்' அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு, 'கம்பி' எண்ண இருப்பது நிச்சயம் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஆயுதம் ஏந்திய வன்முறையில் ஈடுபட்டு வரும் நக்சலைட்கள், தமிழகத்திற்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர்; அதை முறியடித்து வருகிறோம். இதனால், நக்சலைட் ஆதரவு இயக்கங்கள், தமிழகத்தில், அரசின் கவனத்தை ஈர்க்க, மக்கள் நடத்தும் போராட்டங்களில் ஊடுருவி, வன்முறையை துாண்டி வருகின்றன. இது, அவர்களது சதி திட்டத்தின் ஒரு வகை.

மேலும், விடுதிகளில் தங்கி உள்ள, கிராமப்புற, பள்ளி, கல்லுாரி மாணவர்களை மூளைச்சலவை செய்து, அவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போராட்டம் பற்றிய, புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி, வெறியூட்டும் செயலில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் விஷமத்தனமான பேச்சால் ஈர்க்கப்பட்டு, மாணவர்கள், வாழ்வை சீரழித்து வருகின்றனர். தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும், இந்த சமூக விரோத சக்திகளை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உள்ளோம். அடைக்கலம் கொடுக்கும் முக்கிய புள்ளிகளும், கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வருகிறது தடை!
போலீசாரின் தீவிர நடவடிக்கையால் அரியலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வந்த ரகசிய அமைப்புகளின் செயல்பாடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் 'போலீஸ்' பக்ரூதீன் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். ஹிந்து அமைப்பு நிர்வாகிகளை தீர்த்து கட்டும் சதி திட்டமும் முறியடிக்கப்பட்டது. தற்போது மக்கள் போராட்டத்தில் ஊடுருவி வன்முறையை துாண்டிவிடும் நக்சலைட் ஆதரவு இயக்கங்களை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. உளவு போலீசார் உதவியுடன் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.


- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: