புதன், 30 மே, 2018

காணமல் போன தஞ்சை ராஜராஜன் சிலை குஜராத்தில் பிடிபட்டது .. 150 கோடி பெறுமதி ..

தஞ்சை கோயில் சிலைகள் மீட்பு!மின்னம்பலம்: தஞ்சை பெரிய கோயிலிலிருந்து காணாமல்போன ரூ.150 கோடி மதிப்பிலான இரு சிலைகள் குஜராத்தில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலோகமாதேவியின் ஐம்பொன் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது அண்மையில் தெரியவந்தது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. அதில் கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர் சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் ஸ்ரீனிவாச கோபால் ஆச்சாரி மூலமாக சென்னையில் கவுதம் சாராபாய் என்பவருக்கு இரு சிலைகளையும் விற்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் - காலிகோ அருங்காட்சியகத்தில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் நேற்று (மே 29) நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இரு சிலைகளும் அருங்காட்சியகத்தில் இருந்தது உறுதியானது.
ரூ.100 கோடி மதிப்பிலான இரண்டரை அடி உயரமுள்ள ராஜராஜன் சிலையையும், ரூ.50 கோடி மதிப்பிலான இரண்டடிக்கும் குறைவாக உள்ள உலோகமாதேவியின் சிலையையும் அருங்காட்சியக அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சிலைகளுடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் ரயில் மூலம் நாளை (மே 31) சென்னை சென்ட்ரல் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை: