ஞாயிறு, 27 மே, 2018

பாஜகவுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நிதியுதவி வருகிறதா? மு.க.ஸ்டாலின் பேட்டி

நக்கீரன் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர், மு.க.ஸ்டாலின்
 இன்று (26.05.2018) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்: செய்தியாளர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆடியோ ஒன்று விசாரணை ஆணையத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறதே?
ஸ்டாலின்: இந்த ஆட்சியாளர்கள் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுத் தள்ளி, என்கவுண்டர் செய்திருக்கிறார்கள். அதனால் மக்களிடத்தில் இந்த ஆட்சி மீது இன்னும் அதிகமான வெறுப்பு ஏற்பட்டு, இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற உணர்வோடு இருக்கின்ற நிலையில், மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் விசாரணை கமிஷனை பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கிறது.


செய்தியாளர்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, ஏற்கனவே டான்சி வழக்கில் ஆதரவாக செயல்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா தலைமையில் விசாரணை கமிஷன் போட்டு இருக்கிறார்களே?

ஸ்டாலின்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருப்பதே, இதை முழுமையாக மூடி மறைக்க வேண்டும், எந்த உண்மையும் வெளி வந்துவிடக்கூடாது, என்பதற்காக திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள். நியாயமாக, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம், குதிரை பேர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடுபிடி பழனிசாமி ஏற்கனவே, வன்முறையை தூண்டியதால் தற்காப்புக்காக இந்த முறையை கையாண்டதாக தெளிவாக சொல்லிவிட்டார். முதலமைச்சரே விசாரணை நடத்தி, தீர்ப்பு சொல்வது போல, அவரே சொல்லிவிட்டார். எனவே, விசாரணை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. இது ஒரு கபட நாடகம் மட்டுமே.

செய்தியாளர்: பிரதமர் பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், 13 பேர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லையே?

ஸ்டாலின்: இதுதான் அவருடைய மிகப்பெரிய சாதனை. தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது. இங்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் என்கவுண்டர் நடத்து, 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆனால், இதுகுறித்து 4 ஆண்டுகளாக மிகப்பெரிய பிரதமர் பொறுப்பில் இருக்கக்கூடிய மோடி அனுதாபம் கூட தெரிவிக்காமல் இருப்பதுதான் அவரது சாதனை.

செய்தியாளர்: முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு ஒருநாள் முன்பாக சென்று பல்வேறு ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படும் நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்த உத்திரவிட்டது யார் என்று கூட அரசு தெரிவிக்கவில்லையே?

ஸ்டாலின்: அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் யார் மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறாரோ, அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்த உத்திரவிட்டது. அதனால் தான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை அங்கிருந்து மாற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், பணியிலிருந்து இடைநீக்கம் கூட செய்யாமல், காத்திருக்கும் பட்டியலில் கூட வைக்காமல் உள்ளனர். அந்த காவல் கண்காணிப்பளருக்கு அவார்டு கொடுப்பது போல, பதவி உயர்வு கொடுப்பது போல, சென்னைக்கு மாற்றி இருப்பதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

செய்தியாளர்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று ஆலையை மூட படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்து இருக்கிறாரே?

ஸ்டாலின்: அமைச்சரவை கூடி ஒரு கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு காண முடியும். அதைத்தான் தூத்துக்குடி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

செய்தியாளர்: சட்டமன்றத்தில் இதுகுறித்து திமுகவின் நடவடிக்கை என்ன?

ஸ்டாலின்: வரும் 18 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தவிருக்கிறோம். எப்படிப்பட்ட வியூகம் அமைப்பது என்று அதில் முடிவு செய்வோம்.

செய்தியாளர்: பாஜகவுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நிதியுதவி வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதே?

ஸ்டாலின்: இது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று பல இடங்களில் இருந்து நிதி வந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நிதி கிடைத்ததால் தான் பிரதமர் மோடி இதுபற்றி வாய் திறக்காமல் இருக்கிறார் என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.

கருத்துகள் இல்லை: