திங்கள், 28 மே, 2018

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது ... தமிழக அரசு ஆணை பிறப்பித்தது


tamilthehindu :தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான
அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வேதிக் கழிவுகளாலும், மாசடைந்த காற்றாலும் தங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் போராடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை நோக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கு பெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனம் இயங்கி வருகின்றது.
கடந்த 23.3.2013 அன்று, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார். அதன் பேரில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், 8.8.2013 அன்று ஆலையை இயக்குவதற்கு அனுமதியளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு தற்போது நிலுவையில் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனை புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஏற்கெனவே விதித்திருந்த மாசு கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று, அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆலை இயங்கவில்லை. 24.5.2018 அன்று முதல், ஆலைக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தினால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் என்னையும், துணை முதல்வரையும், மூத்த அமைச்சர்களையும், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும் சந்தித்து, ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்குமாறு வைத்த கோரிக்கையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளும், தமிழ்நாடு அரசால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.
மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அரசு, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது” என முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: