வெள்ளி, 20 ஏப்ரல், 2018

தோழர் மருதையன் :எஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறிந்த பத்திரிகையாளர்களுக்கு கோடான கோடி நன்றிகள் !

vinavu :பா.ஜ.க பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில். பத்திரிகையாளர்களுடன் கரம் கோர்ப்போம்! ;எ ஸ்.வி.சேகர் முகநூலில் எழுதியிருப்பதை, ஒரு பொறுக்கி யாரேனும் ஒரு மானமுள்ள பெண்ணிடம் நேரில் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும்? சேகருக்கு செருப்படி கிடைத்திருக்கும். அல்லது கும்பல் அதிகமிருந்திருந்தால் சேகர் செத்திருப்பான்.
பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் கவர்னருக்கு பதிலாக வேறு யாரேனும் இப்படி தட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? அந்தப் பெண் பதிலுக்கு கன்னத்தில் அறைந்திருக்கக் கூடும். அல்லது காறி முகத்தில் உமிழ்ந்திருக்கக் கூடும்.
இப்படிப்பட்ட பொறுக்கிகளின் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்போது, ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி., அல்லது தனது நிறுவனத்தின் நிர்வாகம் குறித்த அச்சம் ஆகியவற்றை மனதில் நிறுத்திப் பார்த்து, இந்தக் காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பத்தான் நமது எதிர்வினையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், நிர்மலாதேவியை நமது வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதுதான் பிழைப்பதற்கான வழியாக இருக்கும்.

பிழைப்பதற்கான வழிகள் எனப்படுபவை மென்மேலும் மானங்கெட்டவையாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மானமுள்ளவர்கள் இன்னமும் நாட்டில் எஞ்சியிருக்கிறார்கள் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறோம். கல்லெறிந்த பத்திரிகையாளர்களே, தமிழ்ச் சமூகத்தின் மானத்தைக் காப்பாற்றியமைக்கு எங்கள் கோடானுகோடி நன்றிகள்.


எஸ்.வி.சேகர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யும் பத்திரிகையாளர்கள் – 20.04.2018
கல்லெறிந்தது தவறு என்று யாரேனும் சொல்வார்களாயின், அவர்களுக்கு நமது பதில் இதுதான்.
“உங்களில் யார் பாவம் செய்தவரில்லையோ அவர்கள், கைது செய்யப்பட்டிருக்கும் இந்தப் பத்திரிகையாளர்கள் மீது கல்லெறியுங்கள்”
ஆம். திருப்பிக் கொடுக்க வேண்டிய பலபேர் அவ்வாறு திருப்பிக் கொடுக்காத காரணத்தினால்தான், இந்த நாய் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று பத்திரிகையாளர்களைக் கடித்திருக்கிறது.
அன்று புதிய தலைமுறை செந்திலுக்கு எதிராகப் பார்ப்பனக் கொழுப்பை கக்கியபோதே, சேகருக்கு இந்த அடியைக் கொடுத்திருந்தால், இன்று கல்லெறியும் தேவை எழுந்திருக்காது. வைரமுத்துவை பேசியதற்கு உரிய மரியாதை எச்.ராஜாவுக்கு அன்றே வழங்கப்பட்டிருந்தால், இன்று கலைஞரையும் கனிமொழியையும் இழிவுபடுத்திப் பேசும் திமிர் வந்திருக்காது.
தபோல்கரை கொன்றதற்கு எதுவும் நடக்கவில்லை, எனவே பன்சாரே. அடுத்து கவுரி லங்கேஷ்.
அமித் ஷா விடுதலை, லோயாவின் கொலையாளிகள் விடுதலை, அசீமானந்தா விடுதலை, இன்று மாயா கோத்னானி விடுதலை.
ஊனா, பீமா கோரேகான், இப்போது உன்னாவ்.
அக்லக், அப்புறம் பெஹ்லு கான், இப்போது ஆசிபா.
ஒரு சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து கொன்று புதைத்த கொலைகாரர்களுக்கு ஆதரவாக பேரணி போகும் வக்கிரத்தை உலகின் எந்தக் காட்டுமிராண்டி சமூகத்திலாவது பார்த்திருக்கிறோமா? பார்க்கிறோம்.
ஜம்முவில் நடந்த அந்த ஊர்வலத்துக்கும், பெண் பத்திரிகையாளர்களை வேசிகள் என்று தூற்றும் சேகரின் பதிவுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா? ஆசிபாவைக் குதறிய மிருகங்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும், தூக்கிலிடவேண்டும் என்று கொதிக்கிறோம்.
அதே நேரத்தில் சேகர் வீட்டின்மீது கல்லெறிந்தது, சிலருக்கு அத்துமீறலாகத் தெரிகிறது. இன்று கல்லெறியத் தவறினால், நாளை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் ஆசிபாக்களை அவர்கள் வேட்டையாடுவார்கள்.
இன்று கைது செய்யப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களை மற்ற ஊடகவியலாளர்கள் கண்டு கொள்ளாமல் கை கழுவினால், கல்லெறிந்தவர்கள் கார்ப்பரேட் நிர்வாகங்களால் தண்டிக்கப்படலாம். மோடி அரசை திருப்திப் படுத்துவதற்காக பலிகடாக்கள் ஆக்கப்படலாம். அவ்வாறு கை கழுவுகிறவர்கள் தம் கைகளை ரத்தத்தில் கழுவுகிறார்கள் என்ற பெட்ரோல்ட் பிரெக்டின் வரிகளை நினைவூட்டுகிறோம்.
பத்திரிகையாளர்கள் போராடிக் கொண்டிருப்பது அவர்களுடைய சொந்தப்பிரச்சினைக்காக அல்ல. இது இந்தச் சமூகத்தின் மானப்பிரச்சினை. அவர்களைக் காப்பாற்ற வேண்டியதும் துணை நிற்க வேண்டியதும் நம் அனைவரின் கடமை.
இவண்
மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

1 கருத்து:

vellai varanan சொன்னது…

we will all unite and fight against the evils.
s.v.sekar must run out of Tamilnadu.