புதன், 18 ஏப்ரல், 2018

ஜெயலலிதாவின் மகளுக்கு மறுக்கப்பட்ட நீதி ! அம்ருதா .மரபணு சோதனை தேவை இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு

மரபணு சோதனை தேவையில்லை: தமிழக அரசு!மின்னம்பலம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கும், அம்ருதாவுக்கும் மரபணு பரிசோதனை செய்யத் தேவையில்லை எனத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தான் ஜெயலலிதாவின் மகள் என்றும், தங்களுடைய குல வழக்கப்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் பெங்களூரூவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில் ஜெயலலிதாவின் மகள் என நிரூபிக்க டி.என்.ஏ சோதனைக்குத் தான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
விசாரணை நடந்துவரும் நிலையில் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று தமிழக அரசின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்பதற்கு இது வரை எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவின் உடலுக்கும், அம்ருதாவுக்கும் மரபணு பரிசோதனை செய்யத் தேவையில்லை" என்று கூறப்பட்டுள்ளது. ,
"ஜெயலலிதா தான் தன் தாய் என்று உரிமை கோர, சிவில் நீதிமன்றத்தைத் தான் அம்ருதா அணுகி இருக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அம்ருதாவின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: