திங்கள், 16 ஏப்ரல், 2018

வீட்டின் பூட்டை உடைத்து பேராசிரியை நிர்மலா தேவியை கைது !

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ள முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டின் பூட்டை உடைத்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
EI தமிழ் :நிர்மலா தேவியை கைது செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூடுதல் எஸ்.பி. நிருபர்களிடம் கூறினார்.
நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியர்! இந்தக் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டது. இங்குள்ள சில மாணவிகளை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நிர்மலா தேவியை இது தொடர்பாக கைது செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கினால் 85 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற முடியும் என்றும், வங்கி அக்கவுண்டுக்கு பணம் வந்து சேரும் என்றும் நிர்மலா தேவி வலியுறுத்தி பேசும் ஆடியோ, இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
நிர்மலா தேவியால் வலியுறுத்தப்பட்ட மாணவிகள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். தவிர, நிர்மலா தேவி மீது நடவடிக்கை கோரி மாதர் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி நிர்வாகம் மேற்படி பேராசிரியை நிர்மலா தேவியை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்தது.

இதன் அடுத்தகட்டமாக கல்லூரி நிர்வாகமும், மாதர் அமைப்பும் தனித்தனியாக நிர்மலா தேவி மீது போலீஸில் புகார் செய்தன. அவற்றின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீஸார் இன்று நிர்மலா தேவியின் இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் நிர்மலா தேவி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான LIVE UPDATES
மாலை 6.45 : பேராசியை நிர்மலாதேவி தவறான முடிவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் பூட்டை உடைத்து போலீசார், அவரை கைது செய்தனர்.
மாலை 6.00 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றார்.
மாலை 5.00 : பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டுள்ளதால் நிர்மலா தேவி தவறான முடிவுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
மாலை 4.50 : நிர்மலா தேவியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு போலீஸார் காத்திருக்கிறார்கள். கதவை உடைத்து நிர்மலா தேவியை கைது செய்வது குறித்து போலீஸார் ஆலோசித்து வருகிறார்கள்.
மாலை 4.30 : பேராசிரியை நிர்மலா தேவியின் அருப்புக்கோட்டை இல்லத்தை சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருக்கிறார்.
மாலை 4.15 : நிர்மலா தேவியை கைது செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூடுதல் எஸ்.பி. நிருபர்களிடம் கூறினார்.


கருத்துகள் இல்லை: