திங்கள், 15 ஜனவரி, 2018

அருண் ஜெட்லி : சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு இணைந்தே தேர்தல்.. ஒரே கட்சி ஆட்சிக்கு -EVM- கரண்டி ?

தினகரன் :சென்னை: சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு இணைந்தே தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தி நாட்டை காப்பாற்றிய பெருமை மோடி அரசே சாரும் என்றும் ஜெட்லி பெருமிதம் தெரிவித்தார். இதேபோல் மோடி அரசில் தான் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது: ஊழல் ஒழிப்புக்கான மிக முக்கியமான நடவடிக்கை தான் பணமதிப்பு நீக்கம். கடினமான நிலையில் தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் பணமதிப்பு நீக்கம் மூலம் நாட்டை பாஜக காப்பாற்றியுள்ளது. பிரதமரின் இந்த துணிச்சலான நடவடிக்கையால் நாட்டின் வருவாய் அதிகரித்துள்ளது.


மோடி ஆட்சிக்கு முன் இருந்த அரசு மக்களுக்கு உதவாத அரசாக செயல்பட்டது. எல்லா நேரங்களிலும் ஏதாவது மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதனால் கட்சிகளின் செயல்பாடுகள் தேர்தலை ஒட்டியே இருப்பதால் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இதன்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மத்திய மாநில தேர்தல்கள் நடத்துவது குறித்து உறுதியான முடிவெடுப்பது சாத்தியமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரசை சாடிய ஜெட்லி

நாட்டில் எதிர்ப்பு உணர்வுகளை தூண்டுவதையே சில சக்திகள் வேலையாக கொண்டிருக்கின்றன என காங்கிரசை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடுமையாக சாடினார். மேலும் நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு ஆதரவு தருவதை காங்கிரஸ் கைவிட வேண்டும் என்றும் ஜெட்லி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: