வெள்ளி, 19 ஜனவரி, 2018

பேருந்து கட்டணங்கள் உயர்வு .. நாளை முதல் ,,,

Troll Trousers 2.0 : · மக்கள் எல்லாம் நாட்டுல ரொம்ப சந்தோஷமா இருக்காங்க போல
தினமணி :இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 22,509 பேருந்துகள் மற்றும் 1,40,615 போக்குவரத்து பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்கள், மலைப்பகுதிகள் போன்ற தொலைதூர இடங்களுக்கும் நாளொன்றுக்கு ஏறத்தாழ 88.64 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் பேருந்துகளை இயக்குகின்றன.

இதன் மூலம், நாளொன்றுக்கு 2.02 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்.  டீசல் மற்றும் மசகு எண்ணெயின் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதாலும், புதிய பேருந்துகளின் விலை உயர்வு, உதிரிபாகங்களின் விலை உயர்வு, பராமரிப்பு செலவுகள், பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு, சட்டரீதியான பணப்பயன்கள் மற்றும் போக்குவரத்தினை இயக்குவதற்கான இதர செலவுகள் அதிகரித்துள்ளதால், அதற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இக்கூடுதல் செலவுகளினால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான வருவாய் ஈட்ட இயலவில்லை. 
இதனால் போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் தொடர்ச்சியான வருவாய் இழப்பால் தொழிலாளர்களுக்காக செலுத்த வேண்டிய பணப்பயன்களை உரிய நேரத்தில் செலுத்த இயலாமல் தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன் பேருந்துகளை சிறப்பாக பராமரித்து இயக்குவதிலும் அவ்வப்போது இடர்பாடுகள் ஏற்படுகின்றன.  இது போக்குவரத்து தொழிலாளர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தையும், மனரீதியான சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்காக மாண்புமிகு அம்மாவின் அரசு மானியம் வழங்கி வரும் நிலையிலும் கூட, வருவாய்க்கும், இயக்க செலவிற்கும் உள்ள இடைவெளி இழப்பு நாளொன்றுக்கு ரூ.9 கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது இயங்கும் அரசுப் பேருந்துகளில் 75 சதவிகிதம் பேருந்துகள் 6 வருடங்களுக்கு மேற்பட்டவையாக இருப்பதால் அப்பேருந்துகளின் இயக்கத்திறனும் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. 
பணியாளர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு, ஓய்வூதியங்கள், எரிபொருட்களின் விலை உயர்வு, இயக்கத்திறனை அதிகரிக்கும் வகையில் புதிய பேருந்துகள் வாங்குதல், பேருந்துகள் பராமரிப்புக்கான செலவு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, 18.11.2011 அன்று ரூ.43.10க்கு விற்ற ஒரு லிட்டர் டீசல், இன்று (19.1.2018), ரூ.65.83 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.  அதாவது, சுமார் 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டும், பேருந்து கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் 2001 ஆம் ஆண்டு முதல் இரண்டு முறையே மாற்றியமைக்கப்பட்டது. கடைசியாக 18.11.2011 அன்று பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. கடந்த 6 வருடங்களாக பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. ஆனால்,  அண்டை மாநிலங்கள்  பேருந்து கட்டணத்தை எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக பல முறை உயர்த்தியுள்ளன.  
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை கர்நாடகா 16 முறையும், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா தலா 8 முறையும் பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்துள்ளன. தமிழ்நாட்டிலுள்ள அடிப்படை பேருந்துக் கட்டணம் பிற அண்டை மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது.  கடந்த 7 வருடங்களில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு ரூ.12,059.17 கோடியினை மானியமாக வழங்கியுள்ளது.  அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள தொடர் நட்டம் ரூ.20,488 கோடியாக உள்ளது. அரசு, பேருந்துக் கட்டணத்தின் உயர்வினை இதுவரை தவிர்த்த போதும், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக இயங்கிடவும், நிதி  நெருக்கடியை சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையினை தொடர்ந்து வழங்கிடவும், தற்போது பேருந்துக் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது. 
இச்சூழ்நிலையில், பேருந்துக் கட்டணம் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் பிற அண்டை மாநிலங்களின் பேருந்து கட்டணத்தைவிட பெரும்பாலும்  குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாதாரண புறநகர் பேருந்தின் புதிய கட்டணம், கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் கட்டணத்தை விட குறைவானதாகும்.  மேலும், அக்கட்டணங்களை அம்மாநில அரசுகள் ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே உயர்த்திவிட்டன.  மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் 20.1.2018 அன்று முதல் அமல்படுத்தப்படும்

கருத்துகள் இல்லை: