சனி, 20 ஜனவரி, 2018

டோக்லாம் எங்களுக்கே சொந்தம் சீனா அறிவிப்பு


தினமலர் :டோக்லாம்,  பெய்ஜிங்: டோக்லாம் பகுதி சீனாவுக்கு சொந்தமானது. அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் ராணுவத்திற்காக உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், தங்களது நடவடிக்கை சட்டப்பூர்வமானது எனவும் சீனா கூறியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில், டோக்லாம் பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், ஹெலிகாப்டர் இறங்க உதவும், ஏழு ஹெலிபேட்கள், 10 கான்கிரீட் நிலைகள், ஏராளமான கவச வாகனங்கள் காணப் படுவதை பார்க்க முடிவதாகவும், அங்கு, 1,800 சீன வீரர்கள் நிரந்தர முகாம்அமைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அப்பகுதியில், மிகப்பெரிய கண்காணிப்பு கோபுரம் உள்ளதாகவும், அது, இரண்டு அடுக்கு கட்டட உயரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது
பிரச்னையில்லை இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லு காங்க் கூறியதாவது: டோக்லாம் தொடர்பான தகவல்களை நானும் பார்த்தேன். இது போன்ற புகைப்படங்களை யார் அளித்தது என்பது தெரியவில்லை. அது குறித்து விரிவான தகவல்கள் ஏதும் என்னிடம் இல்லை. டோக்லாம் பகுதியில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அந்த பகுதி சீனாவுக்கு சொந்தமானது. சீனாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இதில், எந்த பிரச்னையுமில்லை. அங்கு வசிக்கும் மக்களுக்காகவும், ராணுவத்திற்காகவும் தான் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: