வெள்ளி, 19 ஜனவரி, 2018

மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்

நக்கீரன் :கொலை செய்’ என தூண்டுபவர்கள் என்னைப் பொறுத்தவரை இந்துக்களே இல்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடி குறித்து தமது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். இன்று அவர் இந்தியா டுடே நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். மேலும், அவருடன் நடிகர் விஷால், மலையாள திரைப்படம் ‘செக்ஸி துர்கா’ என்ற படத்தின் இயக்குனர் சசிதரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய பிரகாஷ்ராஜ், ‘சசிதரண் சிறந்த இயக்குனர். அவர் இயக்கியிருக்கும் ‘செக்ஸி துர்கா’ படத்தில் இந்துவத்தைப் பற்றியோ, இந்துக்களைப் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், இன்னமும் இந்துத்துவா என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்.


ஒருவரைக் கொலை செய் என கட்டளையிடும் எவரும் இந்துக்களே அல்ல. நான் ஒரு ஆண்டி-மோடி, ஆண்டி-அமித்ஷா மற்றும் ஆண்டி-ஹெக்டே. மேலும், அவர்கள் என்னை ஆண்டி-இந்து என்கின்றனர். உண்மையில் அவர்கள்தான் ஆண்டி-இந்து. எனது தோழர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டபோது அதை ஒரு கூட்டம் கொண்டாடியது. அவர்களை பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்திருக்கிறார். நியாயமாக பார்த்தால் மோடி அவர்களைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் மௌனம் காத்தார். யாருக்கானது அந்த மௌனம்? அது மௌனமாக இருக்கலாம். ஆனால், அந்த மௌனத்திற்கு மொழி இருக்கிறதே?’ என உருக்கமாக பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை: