வியாழன், 18 ஜனவரி, 2018

தமிழகத்தில் குஜராத் பாணி கலவரத்தை உண்டாக்க சதி!

தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்க சதி!
மின்னம்பலம் :ஆண்டாள் பற்றிய தனது கருத்துக்கு கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்டுவிட்டபோதும், அவர் மீதான கொலை மிரட்டல்கள் தொடர்வதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் தமிழகத்தில் எப்படியாவது ஒரு கலவரத்தை உண்டாக்க பாஜக சதி செய்வதாகவும் இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்துக்கும் அமைதிக்கும் பாடுபடும் கலைஞர்கள் செயற்பாட்டாளர்கள் இணைந்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பை சமீபத்தில் கட்டமைத்தனர். இதில் இந்து ராம், பேராசிரியர் வசந்தி தேவி, மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் தாவூத் மியாகான், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் புரவலர்களாக இருக்கின்றனர். மக்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளர்களாக பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஆகியோர் செயல்படுகின்றனர்.

இந்த அமைப்பின் சார்பில் இன்று (ஜனவரி 18) வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பாஜகவின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், வைரமுத்துவை கொலை செய்தால் என்ன என்று பேசியிருப்பது திட்டவட்டமான கொலை மிரட்டல். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் இப்படி பேசியிருப்பது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வேலை. அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் இதே பாணியில்தான் பேசினார். ஆனால் தமிழக காவல்துறை அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது, தமிழக பாஜக தலைவர்களுக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் தலைக்கு விலை வைத்து பேசினார். அதைத் தொடர்ந்து இப்போது இப்படி பேசுகிறார்கள் என்றால் தமிழகத்தில் எப்படியாவது ஒரு கலவரத்தை உருவாக்க திட்டமிட்ட தொடர் முயற்சி இது என்பதை உணரலாம்’’ என்று அந்த அறிக்கையில் எச்சரித்திருக்கிறார்கள்.
மேலும், ’’நயினார் நாகேந்திரன் மீதும், ஹெச்., ராஜா மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அவர்கள் மத்திய ஆளுங்கட்சி என்பதால் தமிழக சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தமிழக அரசு நழுவிவிடக் கூடாது’’ என்றும் மக்கள் மேடை சார்பில் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: