ஞாயிறு, 21 ஜனவரி, 2018

வடநாட்டு ஊடகங்களில் சூறாவழி ..2G Saga unfolds" .. டெல்லியை துவம்சம் செய்கிறது ராசாவின் 2 ஜி புத்தகம் ,,,,

சிவசங்கர் எஸ்.எஸ் :  தில்லி ஓர் தந்திரபூமி. எவ்வளவு சக்தி வாய்ந்தவரையும் வீழ்த்தி விடும். ஆதிக்கக்கர்த்தாக்களுக்கு அடிமையாக இருந்தால் ராஜபோகமாக வாழலாம். மறுப்பேச்சும், மாற்றுப் பேச்சும் இருக்கக் கூடாது.
அதிலும், ஹிந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் அவ்வளவு தான். அது அரசியல்வாதியாக இருந்தாலும், அதிகாரியாக இருந்தாலும், தொழில்புரிவோராக இருந்தாலும் அவர்களை பொருட்படுத்த மாட்டார்கள், தில்லியில்.
பொருட்படுத்தும் அளவு உயர்ந்து வந்து விட்டால், தருணத்திற்கு காத்திருப்பார்கள். சின்ன சறுக்கலையும் பயன்படுத்தி அதலபாதாளத்தில் தள்ளி விடுவார்கள்.
அதலபாதாளத்திற்கு வீழ்த்தப்பட்டவர் மீண்டு, தப்பிப்பது அரிது. அப்படி தப்பித்தாலும், பழைய நிலைக்கு வருவது மிக அரிது. பழைய நிலைக்கு வந்தாலும், வாய் திறப்பது சிரமம்.
அதலபாதாளத்தில் வீழ்த்தப்பட்டவர் மீண்டு வந்து, வீழ்த்தப்பட்ட இடத்திலேயே நின்று, வீழ்த்தப்பட்டதையும், அதிலிருந்து மீண்டு வந்ததையும் நூலாக வடித்துள்ளார், வாய் திறந்தும் உரக்க உரைத்திட்டார்.

இந்திய நாட்டின் கடைகோடி மாநிலத்தில் பிறந்த அந்த மனிதர், வீழ்ந்து, மீண்டு வந்த வரலாற்றை நூலாக வெளியிட்டு தலைநகர் தில்லியின் "உச்சி"த் தலைமுடியைப் பற்றிக் குலுக்கினார் இன்று.
வீழ்த்தியவர்களையும், வீழ்த்த துணை நின்றவர்களையும், வேடிக்கைப் பார்த்தவர்களையும், வாய்மூடி மௌனியாய் இருந்தவர்களையும் பட்டியலிட்டார் இன்று.
ஆம், அண்ணன் ஆ.ராசா அவர்கள் தனது "2G Saga unfolds" நூலை வெளியிட்டு, பலரின் மனசாட்சியை உலுக்கும் கேள்விகளை எழுப்பினார்.
விழாவின் சிறப்பு விருந்தினர் கஷ்மீர் சிங்கம் ஃபரூக் அப்துல்லா. ஏழடி உயரத்தில் சிங்கம் போல் அரங்கில் நுழைந்தார். அனைவரையும் பார்த்து, ஓங்கியக் குரலில் "வணக்கம்" என்று கூறி வணங்கினார். பதில் வணக்கம் கையொலியாய் எழுந்தது.
நூலை வெளியிட்ட 'ஹர் - ஆனந்த் பதிப்பக' நிறுவனர் நரேந்திரக் குமார் வரவேற்றார்.
அண்ணன் ஆ.ராசா உரையாற்றும் போது, நூலை வெளியிட முன்வந்த மற்றொரு பதிப்பகம் பின் வாங்கிய நிலையில், தைரியமாக முன்வந்து நூலை வெளியிட்ட நரேந்திர குமாருக்கு நன்றி தெரிவித்தார்.
சி.ஏ.ஜி தலைவர் வினோத்ராய் பொய்யாக வழங்கிய அறிக்கை பொய் என குற்றம்சாட்டி, ஆதாரமாக நூலில் உள்ள செய்தியை வாசித்துக் காட்டினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து தான் சொல்லும் கருத்துகளை எதிரானதாக வெளியிடுவோருக்காக, தொலைத்தொடர்பு புரட்சிக்கு துணை நின்ற மன்மோகன் சிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ளதையும் வாசித்துக் காட்டினார்.
"நான் வழக்கு சம்பந்தமாக ஆவணங்களில் உள்ளவற்றை நூலில் எழுதி இருக்கிறேன். அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்", என்றார் அண்ணன் ஆ.ராசா.
தீர்ப்பிற்கு பிறகு, அது குறித்து தவறாக எழுதியுள்ள 'பிரண்ட்லைன்' இதழுக்கு சட்ட நுணுக்கத்தோடு பதிலளித்தார்.
நூலை பெற்றுக் கொண்ட முன்னாள் கஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, கஷ்மீரில் நடைபெறும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தார்.
" நானும் ராஜாவும் மத்திய அரசில், அமைச்சர்களாக ஒன்றாகப் பணியாற்றினோம். பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து மீண்டு வந்திருக்கிறார். அதற்கு அவரது தைரியம் தான் காரணம். எதிர்காலத்தில் இந்தியாவிற்காக பணியாற்றுவார்" என்று வாழ்த்தினார்.
அண்ணன் ஆ.ராசா அவர்களின் வாழ்விணையரையும், மகளையும் மேடைக்கு அழைத்து, அவர்களையும் பாராட்டினார் ஃபரூக். "உங்கள் மனதைரியம் தான் அவரது வெற்றிக்கு காரணம்" என்ற போது, அண்ணி பரமேஸ்வரி அவர்கள் கண்கலங்கி விட்டார். மொத்த அரங்கும் ஃபரூக் அவர்களது அன்பில் நெகிழ்ந்து போனது.
அடுத்து, பிரபல பத்திரிக்கையாளர் பூபேந்திர சௌபே நூலாசியர் அண்ணன் ஆ.ராசா அவர்களுடன் உரையாடினார். சௌபேவின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு அனாயசமாக பதிலளித்தார்.
சுப்ரமணியசாமி குற்றம் சாட்டியது குறித்தக் கேள்விக்கு, "நான் புத்தியுள்ளவன். சுப்ரமணிய சாமி பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்றார்.
ப.சிதம்பரம் குறித்த கேள்விக்கு, "உங்களுக்கு ப.சிதம்பரம் மீது வருத்தம் இருந்தால் சொல்லுங்கள். என்னை இழுக்க வேண்டாம்", என்றார்.
ஒரு கட்டத்தில், "நான் வழக்கை வாய்தா வாங்காமல் சந்தித்தேன், நான் ஜெயலலிதா அல்ல" , என்ற போது அரங்கில் கைத்தட்டல்.
பத்திரிக்கையாளர் ஒருவர், "நியாயத்திற்கு போராடுகிறீர்கள். அது காந்தி வழியா, ராய் வழியா?", என்றுக் கேட்டார். " எங்களுக்கு திராவிட சித்தாந்த வழி இருக்கிறது" , என்று நெத்தியடி கொடுத்தார்.
"மோடி குறித்து நீங்கள் குற்றம் சொல்லவில்லையே?", என்ற கேள்விக்கு மிகத் தெளிவாக பதிலளித்தார். "இதில் முரளிமனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி போன்ற பா.ஜ.கவினர் மீது குற்றம் சுமத்தியுள்ளேன். மோடி அப்போது எம்.பி கிடையாது. குஜராத்தில் உட்கார்ந்திருவரை நான் ஏன் சொல்ல வேண்டும்?".
" வினோத் ராய் தான் தவறான அறிக்கைக் கொடுத்து இல்லாததை பிரச்சினையாக்கியவர். காங்கிரஸ் கூட்டணி அரசை வீழ்த்த, துப்பாக்கி வைக்க தோள் கொடுத்தவர் அவர் தான். அவர் தான் இதற்கு பொறுப்பு", என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம், சி.ஏ.ஜி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பத்திரிக்கைகள், எதிர்கட்சிகள் என 2ஜி பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கியவர்களை நேரடியாக குற்றம் சாட்டி வறுத்தெடுத்தார்.
இதுகாறும் கண் தெரியாமல், யானையை தடவிப் பார்த்து ஊகமாக உளறிக் கொண்டிருப்பது போல், 2ஜி ஊழல் என்று பிதற்றிக் கொண்டிருக்கும் "அறிவாளிகள்" அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. படித்து, திருந்துங்கள்.
விரைவில் தமிழிலும் வெளிவர இருக்கிறது.
நீதிமன்றத்தில் உரைத்ததெல்லாம், மக்கள் மன்றத்திற்கும் வருகிறது.
# பொய் வழக்கைப் போலவே, பொய்யுரைத்தோரும் பொசுங்கட்டும் !

கருத்துகள் இல்லை: