செவ்வாய், 23 ஜனவரி, 2018

சமூக நீதியை அழிக்க சதி! நீட் தேர்வு சமுகநீதிக்கு விழுந்த ....

சமூக நீதியை அழிக்க சதி!மின்னம்பலம் :நீட் தேர்வு போன்ற சமூகநீதி பிரச்னையிலும் மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படப் போகிறதா என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் வரும் மே மாதம் 6 ஆம் தேதி மருத்துவத்திற்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்ற முறை நடந்த நீட் தேர்வில் பல்வேறு
விதமான கேள்வித்தாள்கள் கேட்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து குறித்து இன்று (ஜனவரி 23) கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 18.1.2018 அன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு தகவலைத் தெரிவித்தார்.இந்தியா முழுவதும் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மனதில் கொண்டு மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து நீட் தேர்வு கேள்வித்தாள்களைத் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இந்த அறிவிப்பிற்கு முற்றிலும் மாறாக 21.1.2018 நாளேடுகளில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது.மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படியே கேள்வித்தாள் தயாரிக்கப்படும் என்று அதே அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார் .இது எவ்ளவுப் பெரிய கொடுமை, இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சமூக நீதியை ஒரேயடியாக முற்றிலும் ஒழித்துக் கட்டியே தீருவது என்று பாரதீய ஜனதா கட்சி ஆட்சி ஒற்றை முடிவில் உறுதியாக இருக்கிறது என்பது திட்டவட்டமாக விளங்கி விட்டது. தமிழ்நாடு அரசு இதிலும் மத்திய அரசின் கைப்பாவையாகத்தான் ஆடப் போகிறதா?கடந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் இரு சட்டங்கள் என்னாயிற்று? என்றும் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நீட் தேர்வு என்பது சமூக நீதியை அழிப்பதற்கான சதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: