புதன், 24 ஜனவரி, 2018

பாரதிராஜா :நாங்கள் போட்ட சோற்றைத்தின்றுவிட்டு தமிழை அவமதிப்பதா? ஆவேசம்


மின்னம்பலம் :தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் அவமதித்தும், தேசிய கீதத்துக்குத் தகுந்த மரியாதையும் அளித்த விஜயேந்திரரின் செயலைக் கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த அவமரியாதைக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், விஜயேந்திரரை கைது செய்ய வேண்டுமென்றும் தமிழகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் நாகரிகமாக எழுந்து வருகின்றன. இந்த நிலையில் பாரதிராஜாவின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
என் இனிய தமிழ் மக்களே!
தமிழ் மொழியும், தமிழ் இனமும் எங்கே நிற்கிறது, எதைநோக்கி போய்க்கொண்டிருக்கிறது. சிந்திக்கவேண்டிய சூழலிலே ஒவ்வொரு தமிழனும் இருக்கிறான். கேரளம் கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம் கர்நாடகாவாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகம் தற்போது பல்வேறு பிரச்னைகளில் சிக்கியிருக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும் எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழும் வாழ்க்கைக்கே தடை என்று தமிழன் தன் தாய்மண்ணிலே அகதியாய் வாழும் ஓர் அவலம் இங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிப் பேசிய கவிஞன் வைரமுத்துவை, அநாகரிகமாக பேசிய மதவாதிகளே கொஞ்சம் யோசியுங்கள். இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. குரல் கொடுப்பீர்களா?
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன். அந்தச் செம்மொழியை; மொழிகளில் மூத்த தமிழ்மொழியை அந்த மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே! உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? வாழ்வது தமிழ்நாட்டு மண், சுவாசிப்பது தமிழ்க்காற்று, சாப்பிடுவது தமிழ்ச்சோறு. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ய மாட்டேனென்று, தேசிய கீதத்துக்கு மட்டும் நான் மரியாதை செய்வேனென்று எழுந்து நின்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா?
அறிவார்ந்த தமிழ்க்கூட்டமே, நம் முதுகின் மீதேறி சவாரி செய்கிறதொரு கூட்டம். நீ விழிக்கவில்லையென்றால், உன் மொழியையும் உயிரையும் அழித்து, உன் இனத்தையும் அழித்து வாழும் இந்தொரு கூட்டம். இந்த இழிநிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலைமையே வேறு. எந்தத் தமிழனாவது புரியாத மொழியிலே ஏன் மந்திரம் சொல்கிறாய், தமிழில் சொல் என்று போராடியிருக்கிறானா கோயில்களில், இல்லை. சமஸ்கிருத மொழியை அவமானப்படுத்தி இருக்கின்றானா, இல்லை. நாங்களெல்லாம் எல்லா மொழிகளையும் ஒன்றென நினைக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், நீங்கள்தான் எங்கள் பூமியில் வந்து வாழ்ந்துகொண்டு எங்களைப் புறக்கணிக்கிறீர்கள். நாங்கள் சமஸ்கிருதத்தைப் படித்ததுமில்லை. பழித்ததும் இல்லை. நீங்கள்தான் நாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் தமிழை நீஷ பாஷை என்று கூறிகிறீர்கள். வர்ணாசிரமம், மனுதர்மம் என்று மனிதர்களைப் பிரித்த இந்துமதவாதிகளே, இன்று தமிழ்நாட்டில் தமிழையே பிரிக்கின்றீர்களா?
நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதுதான் எங்கள் உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநர் எழுந்து நிற்கிறார். நீ எழ மாட்டியா? தமிழ், நீஷ பாஷை. சமஸ்கிருதம் தேவ பாஷை என்று சொல்லும் உங்களுக்கு அடிப்படை நாகரிகம் கூட மறந்தது ஏன்? தள்ளாத வயதில்கூட கடவுள் மறுப்பாளரான பெரியார் கடவுள் வாழ்த்து பாடும்போது எழுந்து நின்ற வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. தெரியுமா?
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழ் மக்களின் காணிக்கையைப் பெற்றுக்கொண்டு தமிழை அவமதிக்கும் இதுபோன்ற மடாதிபதிகளைத் தமிழகம் ஒருநாளும் ஏற்றுக்கொள்ளாது. ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழவேண்டிய சந்தர்ப்பம் இது. பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியே வா. எலியென உன்னை இகழ்ந்தவர், நடுங்கிப் புலியென செயல் செய்ய புறப்படு வெளியில் என்று பாடிய பாரதிதாசனின் பாடல் போல்தான்; தமிழா, ஒன்றுசேர். தமிழா, தமிழால் ஒன்றுபடு. நீருபூத்த தமிழ் சமுதாயத்தைக் கேட்டுக்கொள்கிறேன். ஒன்று சேர். ஒற்றுமைப்படு. தமிழால், இனத்தால் ஒன்று சேர். தமிழ் வாழ்க

கருத்துகள் இல்லை: