வியாழன், 25 ஜனவரி, 2018

அவமானப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் மீது வழக்குப்பதிவு!

தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் மீது வழக்குப்பதிவு!மின்னம்பலம் :கார் ஓட்டுநரைத் தற்கொலைக்கு தூண்டியதாக நான்கு போலீசார் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் நேற்று டாக்ஸி ஓட்டுநரான மணிகண்டனைப் போக்குவரத்து துறை போலீசார் தாக்கியதால் அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த தீக்காயங்களுடன் அவர் தற்போது கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டன் சுய நினைவை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மணிகண்டனைக் கண்டித்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியிருந்தார்.

“தனது மகனை அவமானப்படுத்தி, தற்கொலைக்குத் தூண்டிய போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஓட்டுநரின் தாயார் வசந்தா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வாடகை கார் ஓட்டி மணிகண்டன் அனுப்பும் பணம் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் என்று அவர் வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து, கார் ஓட்டுநரைத் தற்கொலைக்கு தூண்டியதாக உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன் உட்பட 4 போலீசார் மீது தரமணி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிறகு, சென்னையில் பணியாற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் அனைவரையும் அழைத்து ஆணையர் விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அமைதியாகவும் சட்ட ரீதியாகவும் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: