செவ்வாய், 23 ஜனவரி, 2018

குட்கா அமைச்சர் விஜயபாஸ்கர் ஹாவாலா பணம் .... மாநில விசாரணை நேர்மையாக நடக்காது!

மின்னம்பலம் :குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதே நியாயமானதாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குட்கா ஊழலில் ஹவாலா பணம்!குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கில் வருமான வரித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், "குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ் ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வருமான வரித் துறை கடிதத்தை இணைத்து 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு டிஜிபி அசோக்குமார் கடிதம் எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்தக் கடிதமானது போயஸ் கார்டனில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, சசிகலா அறையிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித் துறை சார்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு இன்று (ஜனவரி 23) விசாரணைக்கு வந்தது. ஜெ.அன்பழகன் சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார்.
திமுக தரப்பிலிருந்து, "குட்கா விவகாரத்தில் தற்போதைய விசாரணை சரியாக இருக்காது, விசாரணையை சிறப்புக் குழுவிற்கு மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் ஹவாலா முறையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக மத்திய சுங்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால், விசாரணை நடத்தத் தன்னிச்சையான விசாரணை அமைப்பு தேவை. ஆகவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்குத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை சரியான பாதையில் செல்கிறது. வழக்கை சிபிஐக்கு மாற்ற மற்ற மாநில அரசுகளின் ஒப்புதல் தேவை என்று கூறினார். மேலும் குட்கா விவகாரத்தின் விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், "குட்கா விவகாரத்தில் பல மாநில அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், மாநில காவல் துறையின் விசாரணை எப்படிச் சரியானதாக இருக்கும், ஆகவே வழக்கை சிபிஐக்கு மாற்றுவதுதான் சரியாக இருக்கும். இதற்கு அரசு தரப்பு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது" என்று கூறினர்.

கருத்துகள் இல்லை: