ஞாயிறு, 21 ஜனவரி, 2018

கட்டான உயர்வு .. தமிழிசை எதிர்ப்பு பொன் ராதா ஆதரவு ,,, தமிழிசை கட்சி மாற ஆயத்தம்?

கட்டண உயர்வு: பாஜகவில் குழப்பம்!
மின்னம்பலம் :பேருந்துக் கட்டண உயர்வுக்கு பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணத்தை உயர்த்துவதில் தவறில்லை என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகத் தமிழக அரசின் சார்பில் கடந்த 19ஆம் தேதி திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. மேலும் திமுக, பாமக, மார்க்சிஸ்ட், விசிக, உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. திமுக போராட்டத்துக்கு காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று (ஜனவரி 21) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "கட்டண உயர்வுக்கு நிதிச்சுமை அதிகரித்ததுதான் காரணம் என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால், எம்.எல்.ஏக்களுக்குச் சம்பள உயர்வு கொடுக்கும்போது நிதி நெருக்கடி இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லையா" என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 24ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இதற்கு முற்றிலும் முரண்படக் கூடிய வகையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "ஆறு ஆண்டுகளாக பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாமல் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதில் தவறில்லை. ஏனெனில் சூழல் கருதியும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தை மனதில் கொண்டும் நியாயமான முறையில் கட்டணத்தை உயர்த்தினால் அதில் தவறு இல்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளாக ஏன் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை. காரணம் கட்டணத்தை உயர்த்தினால் ஓட்டு வராது என்பதுதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைவர்களின் இருவேறு கருத்துக்கள் அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: