திங்கள், 22 ஜனவரி, 2018

கனிமொழி :திராவிடம் என்ன என்றே தெரியாதவர்களின் கைகளில் ஆட்சி சிக்கிக்கொண்டு இருக்கிறது

தி.ஜெயப்பிரகாஷ் :

திராவிடம் பற்றி என்னவென்று தெரியாதவர்களின் கைகளில் ஆட்சி சிக்கிக்கொண்டு இருக்கிறது என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியிருக்கிறார்.
திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தி.மு.க எம்.பி கனிமொழி, 2-ஜி வழக்கின் வெற்றியைப் பற்றியும், தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் பற்றியும் பேசினார்.
அதில், `இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் அதிகமுள்ள மாவட்டம் திருப்பூர். ஆனால் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்றவை திருப்பூரின் பல தொழிற்சாலைகளை மூடிவிடும் நிலைமையை உருவாக்கிவிட்டது. பஸ் கட்டணத்தை 67 % உயர்த்திவிட்டார்கள். ஆட்டோ கட்டணத்தைவிட அது உயர்வாக இருக்கிறது. 2-ஜி வழக்கு ஒரு புனையப்பட்ட பொய் வழக்கு. இந்திய மக்களின் பணத்தை தி.மு.க மூட்டை மூட்டையாக அள்ளிக்கொண்டு போய்விட்டதைப் போன்று தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள். இந்த வழக்கு 7 ஆண்டுகள்வரை நீட்டிக்கப்பட்டதற்கு நாங்கள் காரணமல்ல. சி.பி.ஐ-தான் இந்த வழக்கை சரியாக நடத்தவில்லை.
வழக்கின் ஆரம்ப கட்டத்தில் எங்கள்மீதுதான் குற்றம் என்று எண்ணிய நீதிபதி, எங்களுக்கு ஜாமீன் கூட வழங்க மறுத்துவிட்டார். ஆனால் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற பிறகு, சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் நீதிபதி எங்களை விடுதலை செய்தார். ஆனால், நாம் வெற்றிப் பெற்றுவிட்டோம் என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்ள வேண்டிய தருணம் இதுவல்ல.
தமிழகம் இப்போது அதளபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. மக்களைப் பற்றி துளியும் கவலைகொள்ளாத ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். டெல்லிக்கு அடிமை சாசணம் எழுதிகொடுத்துவிட்டு, அண்ணாவின் கொள்கையை அடகு வைத்துவிட்டு ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தலைவிக்கே துரோகம் செய்துவிட்டு, மக்களுக்கு மட்டும் எப்படி உண்மையாக இருப்பார்கள்.

ஒரு அமைச்சர் வைகையாற்றில் தெர்மாகோலை விடுகிறார். இன்னொரு அமைச்சர் சாயக் கழிவுக்கும், சோப்பு நுரைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். இப்படிப்பட்ட அமைச்சர்களை எல்லாம் வைத்துக்கொண்டு ஜெயலலிதா எப்படித் தான் ஆட்சி நடத்தினாரோ என்று நினைப்பதற்கே பிரமிப்பாக இருக்கிறது. ஜெயலலிதாவின்மீது மாறுபட்ட கருத்துகள் நமக்கு இருந்தாலும், பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை அவர் விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் இன்றைக்கு அவரின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துபவர்கள், தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் தாரைவார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். திராவிடம் பற்றி தெரியாதவர்களின் கையில் இன்று ஆட்சி இருக்கிறது. இந்த விஷ விருட்சங்கள் பரவி, திராவிட மண்ணின் சொந்தகாரர்களுக்கு இடம் இல்லாத நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.
எனவே, ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் தமிழகத்தை நம்மால் காப்பாற்ற முடியும்’ என்றார்.

vikatan.com

கருத்துகள் இல்லை: