செவ்வாய், 15 மார்ச், 2016

உடுமலைபேட்டை சங்கர் கொலை! பதில் கூறாமல் ஓடிய ராமதாஸ்

வேலூர்: விகடன்.com :உடுமலையில் சாதிய மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர்,  சாதிய ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மறுத்துவிட்டார்.
வேலுாரில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அப்போது கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் "சமூக ஜனநாயகம் எனப்படும் சோஷியல் டெமாக்ரஸி நாலு வகை கொண்டது. தாராளம், பழமைவாதம், கம்யூனிசம் போன்றவை தான் அது. இதனை உலகில் 55 நாடுகள் பின்பற்றுகின்றன. இதில் சுதந்திரம், சமத்துவம், நீதி, சமூக ஒற்றுமை இதெல்லாம் மனித உரிமைகள். அரசாங்கம் பணம் படைத்தோர் ஏழை என எல்லா வகையினரையும் சமமாக நடத்த வேண்டும். இந்த கோட்பாட்டை பா.ம.க பின்பற்றும். ஜனநாயக அரசின் கடமை குடிமக்களுக்கு கல்வி, போதுமான வருமானம், வசதியான வாழ்விடம், பண்பாட்டு வாழ்க்கையை அளிப்பது" என்று சொல்ல, பக்கத்தில் இருந்த நிருபர் ஒருவர், சோஷியல் வகுப்புக்கு வந்துட்டமோ என கமென்ட் அடித்தார்.  எங்கே போயிட்டார் சின்னசாமி? அவர் இன்னும் கருத்து எதுவும் கூறலியா?

தொடர்ந்து ராமதாஸ் "இன்றைய சூழலில் மக்களாட்சி நடைபெறவில்லை. மகாராஜா, மகாராணி ஆட்சி தான் இருக்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். பா.ம.க ஏற்கனவே வரைவு தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் விரிவான தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்" என்றார்.

இறுதியாக, உடுமலையில் நடந்தது போன்ற சாதி வெறி ஆணவக் கொலை  குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதுவரை சாந்தமாக பேசிக்கொண்டிருந்தவர், 'சொன்னது வரை போடுங்கள்' என காட்டமாக கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். இது பத்திரிகையாளர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது.

கருத்துகள் இல்லை: