வெள்ளி, 2 மே, 2014

Chennai வெடித்தது செல்போன் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டா?


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று குவஹாத்தி
எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்தது, செல்போன் ரிமோட் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களும் விசாரணையில் குதித்துள்ளனர். விசாரணையின் இறுதியில்தான் வெடித்தது என்ன மாதிரியான குண்டு என்பது தெளிவாகத் தெரிய வரும்.   நேற்று ரயிலில் வெடித்த குண்டு குறைந்த சக்தி கொண்டது என்பதால்தான் பெரிய அளவில் விபரீதமோ, சேதமோ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஒரு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே சதிகாரர்கள் இந்த குண்டுகளைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் பயத்தை விதைக்க முயன்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் ஆசீர் விஜயகுமார், ஹேமா மற்றும் அதிகாரிகள் நேற்று குண்டு வெடித்த ரயில் பெட்டியை ஆய்வு செய்தனர். குண்டு வெடித்த பெட்டிகளின் கீழே தண்டவாளம் பகுதியில் சிதறி கிடந்த வெடிகுண்டு பொருட்களை கைப்பற்றினர். அதில் மஞ்சள் நிறத்திலும், கருப்பு நிறத்திலும் வெடிகுண்டு துகள்கள் இருந்தன. சிறிய பால்ரஸ், குண்டை வெடிக்க செய்யும் டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டன. வெடிக்கப்பட்ட குண்டுகள் சாதாரண குண்டுகளாக இருந்தபோதிலும் அதில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் ஆர்.டி.எக்ஸ். வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மேலும் செல்போன் ரிமோட் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. டைம்-பாம் ரக குண்டாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவியது. வெடிகுண்டு நிபுணர்களும், தடய அறிவியல் நிபுணர்களும் ஆய்வறிக்கையை வெளியிட்ட பின்புதான் சரியான முடிவுக்கு வர முடியும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: