வியாழன், 1 மே, 2014

பெங்களூரில் ஏறிய வடமாநில பயணி மீது திரும்பிய போலீசின் சந்தேகம் !


சென்னை: கவுகாத்தி ரயிலில் குண்டுவெடித்த பெட்டியில் தவறான செல்போன் எண்ணைக் கொடுத்து முன்பதிவு செய்திருந்த வடமாநில மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை சுமார் 7.25 மணியளவில் குண்டுவெடித்தது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய ஸ்வாதி என்ற பெண் உயிரிழந்துள்ளர். மேலும் படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.  இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி, குண்டுவெடித்த பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் விபரங்களை போலீசார் சரி பார்த்தனர். அதில் வட மாநில முகவரி கொடுத்து முன்பதிவு செய்த ஒருவரின் செல்போன் எண்ணை மட்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்நபர் பெங்களூர் ரயில் நிலையத்தில் மற்ற பயணிகளுடன் ரயிலில் ஏறுவது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது. அந்த மர்ம நபர் யார் , அவருக்கும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைக்காக பெங்களூர் போலீசார் சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக தனது பையை எடுக்க வந்த பயணியை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: