ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

Bhopal ரமணா பட பாணியில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை ரூ6 லட்சம் கட்டணம் வசூல்

போபால்: மத்திய பிரதேசத்தில் ரமணா பட பாணியில் பிணத்திற்கு ஒரு வாரம் சிகிச்சை அளித்து ரூ.6 லட்சத்தை வசூலித்த 4 டாக்டர்களை போலீசார் வலை வீசி  தேடி வருகின்றனர்.தமிழில் விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படத்தில் தனியார் மருத்துவமனையில் இறந்து போன உடலுக்கு சிகிச்சையளித்து பணம் வசூலிப்பது  போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன.  உண்மையில் இதுபோல் நடக்குமா என மக்கள் மத்தியில் ஆச்சரியம் உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில்  இதே போன்ற ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு  சிகிச்சை அளிப்பதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.


ஆனால் ஓரிரு நாட்களிலேயே அவர் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசில் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரில் கடந்த  ஒருவாரமாக எங்களது பெண்ணின் உடலை காட்டாமலே வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி வந்தனர். பின்னர் ஒருவாரம் கழித்து அவர் இறந்து  விட்டதாக தெரிவித்தனர். சிகிச்சை செலவாக ரூ.6 லட்சம் கட்ட வேண்டும் என்றும் பில் கொடுத்தனர். கடந்த ஒருவாரமாக அவரது உடலை காட்டாமல் மறைத்து  வைத்து சிகிச்சை அளித்ததன் மூலம் இறந்து போன உடலுக்குத்தான் சிகிச்சை அளித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று தெரிவித்தனர்.இதுகுறித்து போபால் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அங்கிருந்த 4  டாக்டர்கள் தலைமறைவாகினர். தற்போது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை: