ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

TIME இந்தியாவில் சானிடரி நாப்கின் புரட்சி செய்த முருகானந்தம் உலகசாதனையாளர்


பெண்களே வெளியே சொல்ல கூச்சப்படும் ஒரு விசயத்தில், ஒரு ஆணாக, பெண்களுக்கான 'சானிடரி நாப்கினை' மலிவு விலையில் தயாரித்து, அடிமட்ட ஏழை பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார், கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர்.
இதனால் இவர், உலகின் செல்வாக்குமிக்க 100௦ நபர்களில் ஒருவராக அமெரிக்காவின், 'டைம்ஸ்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விருது பெறவுள்ளார். சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100௦௦ பேரில், இந்தியாவிலிருந்து நரேந்திரமோடி, கெஜ்ரிவால், அருந்ததிராய் போன்ற பிரபலங்களும் அடங்குவர். இவர்களுடன் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார், கோவையில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த முருகானந்தம்,49.
தனது சாதனை குறித்து, அவர் கூறியதாவது:எனது சொந்த ஊர் கோவை, பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக்கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துவிட்டார். வீட்டின் வறுமையை போக்க, 'கிரில்' பட்டறைக்கு வேலைக்குப் போனேன். ஒருநாள் என் மனைவி, எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க.என்னனு கேட்டப்ப, 'இது, பொம்பளைங்க சமாச்சாரம்'னு சொன்னா. விடாப்பிடியா விசாரிச்சப்ப, அது அழுக்குத்துணின்னு தெரிஞ்சது. நாப்கின் பயன்படுத்தலாமே என்றேன். 'விலை அதிகம்' என்றாள். அப்போதுதான் புரிந்தது, கிராமப் பெண்கள், ஏழை பெண்கள் வசதி இல்லாம, பழையதுணிகளை பயன்படுத்துறாங்கன்னு.

உடனே மலிவு விலையில் நாப்கின் தயாரிக்க தயாரானேன். கடையில ஒரு நாப்கினை வாங்கி, பிரிச்சுப் பார்த்து, அதே மாதிரி ஒரு நாப்கின் தயாரிச்சேன். என் மனைவிகிட்ட கொடுத்து சோதனை செய்தேன்; 'சரியில்லை'ன்னு சொன்னாள்; முதல் அடியே தோல்வியில் முடிந்தது.அடுத்ததா, மனைவி மட்டுமல்லாம, அம்மா, தங்கச்சி, மருத்துவக் கல்லுாரி மாணவிகள்னு எனது சோதனையை தொடர்ந்தேன். ஒரு கட்டத்தில், சோதனைக்காக, நான் தயாரித்த நாப்கினை பயன்படுத்த பலரும் மறுத்தாங்க. என் முயற்சியை பார்த்து, எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு சிலர் ஊர்ல தகவல் பரப்பி விட்டாங்க. அதைக்கேட்டு என் மனைவியும், அம்மாவும் பிரிஞ்சு போயிட்டாங்க.

என்னோட விடாமுயற்சியில, வெளிநாட்டு கம்பெனிகள் பயன்படுத்துவது, 'பைன்' மரத்திலிருந்து வரும் ஒரு வகை பஞ்சுனு தெரிஞ்சுது. உடனே, 'பைன்' மரப்பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தேன். பத்து வருட போராட்டத்துக்குப்பின், மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன்.அதில் தயாரித்த முதல் நாப்கினை, கல்லூரி மாணவி ஒருவர் பயன்படுத்திட்டு, மிகவும் நல்லா இருக்குன்னு சொன்னார். ரொம்ப வசதியா இருக்குனு சொன்னப்போ, எனக்கு அப்படியொரு சந்தோஷம். பல வருடக்கனவு நிறைவேறியது.நான் தயாரிச்ச இயந்திரத்தை பெண்களே சுலபமா இயக்கி, நாப்கினைத் தயாரிக்கலாம். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான். இந்த தகவல் பரவி நிறைய பேர் இந்த இயந்திரத்தை தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க.கடந்த 2005ல், ஐ.ஐ.டி., 'சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு' என்று, என் கண்டுபிடிப்பை தேர்வு செய்தது. என் கனவே இந்தியாவுல இருக்கிற அத்தனை ஏழைப் பெண்களுக்கும், என் கண்டுபிடிப்பு போய் சேரணும்ங்கறதுதான். இனி எந்த சகோதரியும் மாதவிடாய் காலங்கள்ல அழுக்குத்துணியைப் பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு, முருகானந்தம் தெரிவித்தார்.


உலகின் 11 நாடுகளுக்கு ஏற்றுமதி



சர்வதேச அளவில் நாப்கின் பிரபலமடைந்திருந்தாலும், அதன் விலை அதிகம் என்பதால், ஏழை பெண்கள் பயன்படுத்த முன்வருவதில்லை. இந்தியாவில் 5 சதவீத பெண்கள் மட்டுமே நாப்கினை பயன்படுத்துகின்றனர். ஆனால், முருகானந்தம் கண்டறிந்த நாப்கின், உலகின் 11 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறதாம்.நமது நாட்டின் வடமாநிலங்களிலுள்ள 50 பள்ளிகளில், மாணவிகளே தங்களுக்குத் தேவையான நாப்கினை, 30 விநாடிகளில் தயாரிக்க கற்றுக்கொடுத்துள்ளார். மலிவான மற்றும் ஆரோக்கியமான நாப்கினை கண்டுபிடித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில், ஒருவராக அமெரிக்காவின் 'டைம்ஸ்' பத்திரிக்கையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமா கையால் விருது பெறவுள்ளார். முருகானந்தத்தை பாராட்டி ஊக்குவிக்க, 944 22 24069 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- நமது சிறப்பு நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: