வெள்ளி, 25 அக்டோபர், 2013

கலைஞர் மூன்றாவது அணிக்கு வலு சேர்க்கிறார் ?

சென்னை: நாட்டின் நன்மைக்காக, எந்த அணி அமைந்தாலும், அந்த அணியை நான் வரவேற்கிறேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார், சென்னையில் அவரது பேட்டி: "இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறேன். ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசு போக்குவரத்து பஸ்களில் எல்லாம், இரட்டை இலை சின்னம் பெரிதாக பொறிக்கப்பட்டது பெரும் தவறு. இம்மாதம், 30ம் தேதி டில்லியில் மூன்றாவது அணி கூடுகின்ற கூட்டத்தில், தி.மு.க., கலந்து கொள்ள இதுவரையில் அழைப்பு வரவில்லை. காங்கிரஸ் - பா.ஜ., தவிர்த்த அந்த மூன்றாவது அணி, நாட்டின் நன்மைக்காக, எந்த அணி அமைந்தாலும் அந்த அணியை நான் வரவேற்கிறேன். மூன்றாவது அணி அமைக்கும் கூட்டத்திற்கு என்னை அழைத்தால், அதைப்பற்றி எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி கலந்து பேசி முடிவெடுக்கும். இவ்வாறு  கூறியுள்ளார்.




நிர்வாகத் திறமை எது; கருணாநிதி கேள்வி:
"மக்களை துன்பத்துக்கு ஆளாக்கி, போக்குவரத்துக் கழகங்களின் வருவாயைப் பெருக்குவது தான் நிர்வாகத் திறமையா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த, 2011ல் அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பின், படிக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கையில்,"2011 12ல், 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. மீண்டும், 2012 2013 பட்ஜெட் அறிக்கையில், "2012 13ல் 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்' என, படிக்கப்பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்து இண்டரை ஆண்டுகளாகி விட்டன. அறிவித்த 6,000 பஸ்களையாவது வாங்கி முடித்து விட்டார்களா என்றால் கிடையாது. இதுவரை 3,051 பஸ்கள் தான் வாங்கப்பட்டுள்ளன. புதிய பஸ்களை துவக்கி வைக்கும் விழாவில், முதல்வர் பேசுகையில், மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது, போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டு மொத்த இழப்பு 6,150 கோடி ரூபாய் என்றும், அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்கிப் போகும் நிலைமையில் இருந்தது என்றும், அதற்குக் காரணம் தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நிர்வாகத் திறமை என, அவர் எதை நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. பஸ்களின் கட்டணத்தை அதிக அளவிற்கு உயர்த்தி, மக்களை எல்லாம் பெரும் துன்பத்துக்கு ஆளாக்கி, போக்குவரத்துக் கழகங்களின் வருவாயைப் பெருக்குவது தான் நிர்வாகத் திறமையா? தி.மு.க., ஆட்சியில், அந்தச் சுமையையெல்லாம் அரசே தாங்கிக் கொண்டு, பொதுமக்கள் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக, பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொண்டது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: