ஞாயிறு, 20 அக்டோபர், 2013

PM Office: தகுதி அடிப்படையில்தான் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ! அட இதைத்தானே ராசாவும் செய்தார் ! ராசாவுக்கு ஒரு நீதி கூஜாவுக்கு ஒரு நீதி !

ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு தகுதி அடிப்படையில்தான் நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
சர்ச்சைக்குள்ளான இப் பிரச்னையில் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பிரதமரின் பங்கு என்ன என்பதை விளக்கி அவரது அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தலபிரா 2,3-ஆவது நிலக்கரிச் சுரங்கங்கள் தகுதி அடிப்படையில்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தேர்வுக் குழு வழங்கும் பரிந்துரைப்படி, நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் குழுவின் பரிந்துரைக்கும் இறுதி முடிவுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.

பிர்லாவின் இரு கடிதங்கள்: ஒடிஸாவின் சம்பல்பூரில் ஒருங்கிணைந்த அலுமினியம் திட்டத்துக்காக 650 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் தேவைப்படும் நிலக்கரியை தலிபரா 2-ஆவது சுரங்கத்தில் இருந்தும், ஹிராகுட் அலுமினியம் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தேவைப்படும் 100 மெகா வாட் மின்சாரத்தை தலபிரா 3-ஆவது சுரங்கத்தில் இருந்தும் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று அதன் உரிமையாளரான ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பிரதமருக்கு 2005 மே 7-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமருக்கு 2005, ஜூன் 17-ஆம் தேதி மீண்டும் கடிதம் எழுதினார். இதையடுத்து, அவரது கடிதங்களை நிலக்கரித் துறைக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பி கருத்து கேட்டது.
அதன்பேரில் நிலக்கரித் துறை 2005, ஆகஸ்ட் மாதம் அனுப்பிய அறிக்கையில், "தலபிரா 2-ஆவது நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்க மூன்று போட்டியாளர்களை தேர்வுக் குழு கண்டறிந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு 2-ஆவது சுரங்கத்தை ஒதுக்க தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. மகாநதி நிலக்கரி நிறுவனத்துக்கு தலபிரா 3-ஆவது நிலக்கரிச் சுரங்கம் ஏற்கெனவே தனியாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால், அந் நிறுவனமும் நெய்வேலி நிறுவனமும் கூட்டு ஒப்பந்தம் செய்து 2, 3 ஆகிய நிலக்கரிச் சுரங்கங்களை பகிர்ந்து கொள்ளலாம்' என்று கூறப்பட்டிருந்தது.
ஓடிசா முதல்வரின் பரிந்துரை: இந் நிலையில், பிரதமருக்கு ஒடிஸா முதல்வர் 2005, ஆகஸ்ட் 17-ஆம் தேதி கடிதம் அனுப்பினார். அதில், "அலுமினியத்தை உற்பத்தி செய்யும் ஆலைகள் மூலம் ஓடிஸாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். உற்பத்தித் துறை வளர்ச்சி பெறும். அதனால், ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்க அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று ஒடிஸா முதல்வர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, 2005, ஆகஸ்ட் 29-ஆம் தேதி நிலக்கரித் துறை கோப்பை பிரதமர் பார்த்தபோது, ஒடிஸா முதல்வரின் கடிதமும் பரிசீலிக்கப்பட்டது. அதனால், முதல்வரின் கடிதத்தைப் பரிசீலித்து, மீண்டும் அறிக்கை தரும்படி நிலக்கரித் துறையை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
நிலக்கரித் துறை குறிப்பு: இதையடுத்து, நிலக்கரித் துறை அனுப்பிய குறிப்பில், "தலபிரா 2, 3 ஆகிய நிலக்கரிச் சுரங்க வளங்களை ஒரே நிலக்கரி வளமாகக் கருதி ஹிண்டால்கோ, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், மகாநதி நிலக்கரி நிறுவனம் ஆகியவை கூட்டு ஒப்பந்தம் செய்து பெற்றுக் கொள்ளலாம்' என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, "தலபிரா 2, 3 ஆகிய சுரங்க உற்பத்தியில் மகாநதி நிலக்கரி நிறுவனம் 70 சதவீதமும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்- 15 சதவீதம், ஹிண்டால்கோ-15 சதவீதம் என்ற விகிதத்தில் ஒதுக்கீடு பெறலாம்.
ஹிண்டால்கோ-நெய்வேலி நிறுவன கூட்டைப் பொருத்தவரை, பிரதமர் ஏற்கெனவே பரிந்துரைத்த விதிமுறைகளைத் தளர்த்த வேண்டியிருக்கும். ஆனால் மகாநதி நிலக்கரி நிறுவனத்தின் பங்கிலிருந்து நெய்வேலி நிறுவனத்துக்கு அளித்து இதனை சரிசெய்யலாம். இரு பொதுத் துறை நிறுவனங்களின் நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், அவற்றின் மின்திட்டங்களை நிறைவேற்றும்படிச் செய்து அவற்றின் நலன்களையும் பாதுகாக்க இயலும்' என பரிந்துரைக்கப்பட்டது.
பிரதமர் ஒப்புதல்: இந்த ஏற்பாடு தகுதி அடிப்படையில் இருந்ததால், நிலக்கரித் துறை பரிந்துரையை பிரதமர் ஏற்றுக் கொண்டு 2005, அக்டோபர் 2-ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார் என்று பிரதமர் அலுவலகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
2005-ஆம் ஆண்டில் நிலக்கரிச் சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு பெற்றதாக ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அவரது குழும நிறுவனமான ஹிண்டால்கோ, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக் ஆகியோர் மீது கடந்த 16-ஆம் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
பரேக் கருத்தால் சர்ச்சை: இந் நிலையில், "துறைச் செயலர் என்ற முறையில் நான் செய்தது தவறு என சிபிஐ கருதமானால், அத் துறையின் அமைச்சர் பொறுப்பை கவனித்த பிரதமர் மன்மோகன் சிங்கையும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்' என்று பரேக் கூறினார். இதனால், இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.  dinamani.com

கருத்துகள் இல்லை: