வியாழன், 24 அக்டோபர், 2013

பாலியலில் வறண்ட சமூகம் ! பாலியல் குற்றங்களின் பின்னணியில் இருப்பது ????

எல்லா உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுவிட்டது, ஆனால் இந்த சமூகத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகால்தான் இல்லை. இதை எப்படி தனிமனிதனின் பிரச்சினை என்று ஒதுக்குவது?
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு பஞ்சாயத்து போர்ட் தண்ணீர் குழாய் இருக்காது. இரண்டு வீதிகளுக்கு சேர்த்து ஒரு பொதுக் குழாய் இருக்கும். அதில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் தண்ணீர் வரும். அதுவும் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தான். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் சண்டை நடக்கும். பெண்கள் பின்னியெடுத்துவிடுவார்கள். சண்டை என்றால் சாதாரணச் சண்டை இல்லை. கிட்டத்தட்ட செவி வழிப் புணர்ச்சி- சிறு திருத்தம்- அது செவி வழி வன்புணர்ச்சி. நாறடித்துவிடுவார்கள். சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது வெறும் ஒரு குடம் தண்ணீர் பிரச்சினைதான். ஆனால் அந்தப் பெண்களைப் பொறுத்தவரைக்கும் அது தண்ணீர் பிரச்சினையே இல்லை. ஈகோ சார்ந்த போராட்டம்; யார் பெரியவள் என்ற போட்டி; தனது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலை நாட்டக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு. மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

அப்பொழுதெல்லாம் எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதுதான் இருக்கும். அம்மா வீட்டில் இருந்தால் தண்ணீர் வரும் நேரத்தில் அந்தப் பக்கமே விட மாட்டார். கெட்டுப் போய்விடுவேனாம். அப்படியே அந்தப் பக்கம் போனாலும் முக்கியமான வார்த்தைகளைத் தவிர மற்றதெல்லாம் புரியாது. ஆனால் சிலவற்றை விஷூவலைஸ் செய்துவிட முடியும். ‘அறுத்து தோரணம் கட்டிவிடுவேன்’என்ற வசனம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அப்படியொரு தோரணத்தை நினைத்துக் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓடிய பருவம் அது. 
வயது கூடக் கூட பெண்களை விட்டு விலகத் துவங்கியிருந்தேன். விடலைப் பருவம் முழுவதும் ஆண்கள் பள்ளியிலேயே கரைந்து போயிற்று. திரும்பிய பக்கமெல்லாம் தண்டுவன்கள்தான். மல்லிகை வாசமே இல்லாத பதின்ம பருவத்தை விடக் கொடுமையான ஒன்று வேறு இருக்க முடியாது. அப்படியே வளர்ந்த பிறகு ‘பெண்களும் கெட்டவார்த்தைகளும்’ என்பது எனக்கு ஃபேன்டஸியான விஷயமாக மாறிப் போயிருந்தது. இது அனேகமாக சிறுவயது விஷூவலைசிங்கின் பாதிப்பாக இருக்கக் கூடும். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘பெண்கள் கெட்டவார்த்தை பேசுவார்களா?’ என்று தெரிந்து கொள்ள படு ஆர்வமாகத் திரிந்தேன். ஆனால் கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை. எந்தப் பெண்ணும் ஆண்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு கெட்ட வார்த்தை பேசுவதில்லை. இருபது வருடங்களில் பெண்களின் அகராதியிலிருந்தே கெட்டவார்த்தை அழிந்து போய்விட்டது போலத் தோன்றியது. ஆங்கிலப் படங்களில் ‘Fuck' என்று பெண்ணின் வாயிலிருந்து வந்துவிட்டால் போதும். அதுவே உத்வேகமடைய போதுமானதாக இருந்தது. இந்த உத்வேகத்திற்காகவே கொட்டக் கொட்ட ஆங்கிலச் சேனல்களை வெறித்துக் கொண்டிருந்த காலம் ஞாபகத்தில் இருக்கிறது.
இதே போலத்தான் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக செக்ஸ் கதை படிக்க வேண்டுமென்றாலும் அவ்வளவு எளிதில்லை- பழுப்பு நிறத்தில் மட்டமான தாளில் கிடைத்த சரோஜாதேவி புத்தகத்தை நீளமான கணக்கு நோட்டில் வைத்து மறைத்துத்தான் படிக்க வேண்டும். நம் செளகரியத்துக்கு ஏற்ப வீட்டிற்கு எடுத்துப் போய் படிப்பது ரிஸ்க். அதுவும் இல்லாமல் அரை மணி நேரம்தான் நமக்கு ஒதுக்கப்பட்ட நேரமாக இருக்கும். அதற்குள் வேகமாக படித்துவிட்டு ‘க்யூ’வில் நிற்பவனிடம் கொடுத்தாக வேண்டும். அதனால் வகுப்பறை அல்லது டியூஷனிலேயே பாராயணத்தை நடத்தியாக வேண்டும். நம் நேரம் கெட்டுக் கிடந்து தெரியாத்தனமாக அப்புச்சாமி வாத்தியாரிடமோ, டியூஷன் மாஸ்டர் கர்ணனிடமோ சிக்கிக் கொண்டால் சோலி சுத்தம். குரல்வளையிலேயே கால் வைத்து மிதிப்பார்கள். இத்தனை கட்டுக்காவல்களையும் மீறி நம் அறிவை வளர்த்துக் கொண்ட காலம் அது.
ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியா இருக்கிறது? பாலியல் குறித்த தேடல் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. பெண்கள் கெட்டவார்த்தை பேசுவார்களா என்று தெரிந்து கொள்ள விரும்பினால் வெறும் யூடியூப் போதுமானதாக இருக்கிறது. சகட்டு மேனிக்கு பேசுகிறார்கள். அதுவும் தமிழிலேயே வெளுத்துக் கட்டிய ஆடியோக்கள் கிடைக்கின்றன. கேட்டு சலித்துப் போய்விட்டது. இப்பொழுது அது ஃபேன்டஸியாகவும் இல்லை; க்ரேஸியாகவும் இல்லை- நம்மையும் அறியாமல் இதில் அடுத்த படி என்ன என்று மனம் யோசிக்கத் தொடங்கிவிடுகிறது. இதுவொரு பரிணாம வளர்ச்சி போலிருக்கிறது.
இன்றைக்கு இணையமும், ஸ்மார்ட் ஃபோனும் இவற்றையெல்லாம் மிக எளிதாக மாற்றிவிட்டன. பாலியல் தேடல்கள் எவ்வளவு எளிதாகிவிட்டனவோ அதே அளவிற்கு தொடர்புகளும் எளிதாக மாறிவிட்டன. அந்தக் காலத்தில் ‘ஒரு வார்த்தை பேச ஒரு வருடம் காத்திருந்தார்கள்’. டைப்ரைட்டிங் செண்டரிலோ, வகுப்பறையிலோ, வாய்க்கால் மேட்டிலோ சைகையில் ஆரம்பித்து, சிரிப்புக்கு வந்து பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்குள் வீட்டில் திருமண பேச்சைத் தொடங்கியிருப்பார்கள். 
இப்பொழுதெல்லாம் ஒரு மிஸ்டு கால் போதும். பில் றகு அந்த மிஸ்டு காநம்மை சொர்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும். தகவல் தொடர்பியலில் ஏற்பட்டிருக்கும் இந்த எளிமையாக்கல் சமூகத்தில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை. தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சி என்பது சமூகத்தில் இருண்ட மனநிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ‘இருண்ட மனநிலை’ என்பது அடுத்தவருக்கு தெரியாத ‘secret பக்கங்கள்’.
ஒவ்வொரு மனிதனுக்கும் மிக ரகசியமான ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அந்தரங்கங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறன. நாம் உருவாக்கி வளர்த்துக் கொண்டிருக்கும் அந்தரங்கமான உறவுகளைப் பற்றி நமக்கு மிக நெருக்கமான- கணவனுக்கோ, மனைவிக்கோ, அம்மா அப்பாவுக்கோ அல்லது மகன் மகளுக்கோ கூட தெரிவதில்லை-இந்த அந்தரங்கமான தொடர்புகளில் இருப்பவர்களை பார்த்திருக்கக் கூட மாட்டோம். ஆனால் எந்த extreme எல்லைக்கும் சென்றும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருப்போம். இது பெரிய உணர்வுபூர்வமான உறவு நிலையும் கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் கசந்துவிடும் போது இந்த தொடர்புகளை விட்டுவிட்டு இன்னொரு புதிய தொடர்புகளை கண்டுபிடித்துவிடுகிறோம். அவ்வளவுதான்.
நகரங்களில் நடைபெறும் கொலைகளாகட்டும், தற்கொலைகளாகட்டும்- தொண்ணூறு சதவீத விசாரணை கள்ளக்காதலில்தான் போய் நிற்கின்றன. அதிலும் இந்த குற்றச்செயல்களின் பிண்ணனியை ஆராய்வதற்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் செல்போன்கள்தான் உதவியாக இருக்கின்றன. அவனுக்கு அவள் இத்தனை எஸ்.எம்.எஸ்கள் அனுப்பியிருந்தாள். இவன் அவளோடு இத்தனை முறை ஃபோனில் பேசியிருந்தாள் என்று அறிக்கை விடுகிறார்கள் விசாரணை அதிகாரிகள். 
எதற்காக இந்த உறவுகள் தேவைப்படுகின்றன? நம்மைச் சுற்றிலும் திரும்பிய திசைகளிலெல்லாம் நமது உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. இந்த தூண்டப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஏதோவொரு விதத்தில் வடிகால்களைத் தேடத் துவங்குகிறது மனம். இந்த தேடியலையும் மனதுக்கு இணையமும் தகவல் தொடர்பியலும் ஏதோவொரு விதத்தில் நமக்கு ‘வெர்ச்சுவல் பார்ட்னராக’ மாறிவிடுகிறது அல்லவா? இதுதான் சிக்கல்.  உண்மையில் இத்தகைய தொடர்புகள் நமக்குள் கசடுகளை மட்டுமே உருவாக்குகின்றன. நம்மைவிட்டு வெளியேறாத கசடுகள் இவை. 
நமக்குத் தெரிகிறது- இவையெல்லாம் கசடுகள் என்று. ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் இவற்றிலிருந்து தப்பித்துவிட முடியாது என்று நினைக்கிறேன். மிகப் பெரிய ட்ராப் இது. ஆனால் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக அப்பாவின் நெம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது. அன்றைக்கு அம்மா எடுத்தார். ‘சுமதிங்களா?’ என்று கேட்டிருக்கிறான். ‘இல்லைங்க சுப்புலட்சுமி’ என்றிருக்கிறார். ‘திண்டுக்கல்லிலா இருக்கறீங்க?’ என்று அடுத்த கேள்விக்கு அம்மாவும் தெரியாத்தனமாக ‘இல்லைங்க பெங்களூரில் இருக்கிறோம்’ என்று உளறியிருக்கிறார்.
அம்மாவின் வாயிலிருந்தே தகவல்களை வாங்கிக் கொண்டவன் ‘நான் அடிக்கடி ஓசூர் பக்கம் வருவேன், நீங்க ஃப்ரீயா இருந்தீங்கன்னா சொல்லுங்க’ என்று மூன்றாவது வாக்கியத்திலேயே கேட்டிருக்கிறான். எதிர்முனையில் இருப்பவருக்கு என்ன வயது இருக்கும், எப்படி இருப்பார் என்ற எந்த அக்கறையும் அவனுக்கு இல்லை. அவனுக்குத் தேவையானதெல்லாம் ஒரு பெண்ணின் குரல்- அது மட்டும்தான். அம்மா மூர்ச்சையாகாத குறை. அதிர்ச்சியாகிவிட்டார். அதன் பிறகு நான் அழைத்து திட்டிய பிறகு ‘சாரி சார், ராங் நெம்பர்’என்று துண்டித்துவிட்டான். அது ராங் நெம்பர் எல்லாம் இல்லை. வேண்டுமென்றே பேசிய ராங் பேச்சு. 
இப்படி கைக்கு வந்த எண்ணிற்கு டயல் செய்து பேசுவது, ஒருவேளை பெண்கள் பேசினால் தூண்டில் வீசிப்பார்ப்பது என்று திரிகிறார்கள். 
பிறகு என் நெம்பரில் இருந்து ‘நான் நித்யா’ என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன். எந்த ஊர்? வயது என்ன? என்ற இரண்டு கேள்விகளுக்கு பிறகு ‘உனக்கு எனன் ரேட்?’ என்று மெசேஜ் அனுப்புகிறான். இவனை எல்லாம் என்ன செய்வது? தொடர்ந்து மெசேஜ் அனுப்பினால் தனக்கு திருமணமாகிவிட்டது, குழந்தை இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறான்.
இவனை போலீஸில் பிடித்துக் கொடுக்கலாம்தான். கொடுத்தால் என்ன நடக்கும்? நாலு சாத்து சாத்துவார்கள். அதனால் இந்த சமூகம் திருந்திவிடுமா என்ன? இவனைப் போல இன்னும் ஏகப்பட்ட பேர்கள் இருப்பார்கள். தனிப்பட்ட ஒருவனை அடித்து திருத்துவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. சமூகத்தின் பெரும்பகுதி இப்படித்தான் சிதைந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு திருமணமாகிவிட்டது, குழந்தை இருக்கிறது, குடும்பம் நடக்கிறது. எல்லாம் இருந்தும் என்ன பயன்? வறண்டு கிடக்கிறான். யாரையாவது தேடுகிறான். இதுதான் பாலியலில் வறண்ட சமூகம் என்பது. எல்லா உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுவிட்டது, ஆனால் இந்த சமூகத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகால்தான் இல்லை. இதை எப்படி தனிமனிதனின் பிரச்சினை என்று ஒதுக்குவது?  nisaptham.com

கருத்துகள் இல்லை: