வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ஜயேந்திரனுக்கு போட்டியாக ஆன்மீக குரு அஸ்ராம் பாபு ! பாலியல் வல்லுறவு சாமியார்

அஸ்ராம் பாபுஆசிரமத்தில் நடைபெற்ற மத விழா ஒன்றுக்கு அப்பெண்ணை அழைத்துள்ள ஆன்மீக குரு அச்சிறுமியிடம் தன் கைவரிசையை அதாவது வக்கிரத்தைக் காட்டியிருக்கிறான்.
ன்மீக குரு அஸ்ராம் பாபு (வயது 72) மீது பாலியல் வல்லுறவு செய்ததாக 16 வயது மைனர் பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அவரது ஆசிரமத்தில் வைத்து இம்மாத துவக்கத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சஜன்பூரை சேர்ந்த அப்பெண் ஜோத்பூரில் உள்ள அஸ்ராம் பாபுவின் குருகுல விடுதியில் தங்கி படித்து வருகிறாள். ஆசிரமத்தில் நடைபெற்ற மத விழா ஒன்றுக்கு அப்பெண்ணை அழைத்துள்ள ஆன்மீக குரு அச்சிறுமியிடம் தன் கைவரிசையை அதாவது வக்கிரத்தைக் காட்டியிருக்கிறான். பல நாட்கள் தொடர்ச்சியாக இதனை செய்திருக்கிறான்.
அஸ்ராம் பாபுவின் பரம பக்தர்களான அப்பெண்ணின் பெற்றோர்களிடம் அவள் கடந்த 17-ம் தேதி தனக்கு நேர்ந்த கொடூரத்தை சொல்ல ஆரம்பித்திருக்கிறாள். அதிர்ந்து போன அவளது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். இந்துமத, ஆன்மீக உணர்வுகளின் முதலாளியான குருவை எதிர்க்கப் பயந்த ஜோத்பூர் மற்றும் சஜன்பூர் போலீசார் புகாரை பதிவு செய்ய மறுத்தனர். எனவே ஆகஸ்டு 19 அன்று புதுதில்லிக்கு வந்து புகார் தர அவளது பெற்றோர் முயன்றனர்.
புதுதில்லி போலீசார் அவளை லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் மருத்துவமனைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். சோதனையில் அவள் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்குள்ளாகி இருப்பது உறுதி செய்யப்படவே அஸ்ராம் பாபு மீது ஸீரோ எப்.ஐ.ஆர் (எல்லா காவல் நிலையத்தினாலும் விசாரிக்கும் வகையில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஸ்ராம் பாபுவின் மூன்று நாள் ஆன்மீக யோகா சத்சங் எனும் கூட்டம் ஒன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆகஸ்டு 20-ம் தேதியுடன் முடிவடைந்தது. இறுதி நாளில் டெல்லி கமலா மார்க்கெட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவே அவரிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளதால் வழக்கு விசாணையை அம்மாநில போலீசுக்கு மாற்றியுள்ளனர். இதற்கிடையில் ஆசிரமத்தின் செய்தித் தொடர்பாளர் நீலம் துபே கூறுகையில் சிலர் தூண்டி விட்டுதான் அப்பெண் இப்படி பேசுவதாகவும், இதற்கு பின்னால் உள்ள அரசியல் விரைவில் அனைவருக்கும் தெரிய வரும் என்றும் கூறியுள்ளார். நித்தி முதல் சாயிபாபா வரை அனைத்து கிரிமினல் சாமியார்களும் இப்படித்தான் கூறுகின்றனர்.
அஸ்ராம் பாபு
யோகா என்ற கலையுடன் ஆன்மீகத்தை இணைத்து மோசடி விற்பனை
400-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட குருகுலங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமிதிகள், பல பத்து லட்சம் பக்தர்கள் என கைவரப் பெற்றிருக்கும் அஸ்ராம் பாபுவிற்கு யோகா என்ற கலையுடன் ஆன்மீகத்தை இணைத்து மோசடியாய் விற்பனை செய்யத் தெரிந்திருந்ததால் ஆன்மீக சந்தையில் நன்கு தொழில் புரிந்து வந்தார். உலகம் முழுக்க சத்சங், சமிதி என கிளை பரப்ப துவங்கிய இந்நிறுவனம் இறைவனோடு யோகத்தின் மூலம் பேசுவது வரை பக்தர்களை அழைத்துச் செல்வதாக கூறுவதுடன், தெய்வக் குழந்தை பிறந்து விட்டதாகவும் கூறுகின்றது. பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள பெராணி கிராமத்தில் 1998-ல் பிறந்த அசுமால் என்ற சிறுவனை கடவுளின் அவதாரமாக முன்னிறுத்தி உள்ளது. அந்த கடவுள் பையனுக்கு அஸ்ராம் பாபுவின் பாலியல் வக்கிரம் தெரியுமா என்பது தெரியவில்லை.
இத்தகைய ஆன்மீக மோசடியுடன் கூடவே ரியல் எஸ்டேட் மோசடியையும் செய்ய அஸ்ராம் பாபு தயங்கவில்லை. மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள மபில் ரத்லாம் என்ற இடத்திலுள்ள மாங்கல்ய கோவிலுக்கருகில் 2001-ல் நடத்திய சத்சங் நிகழ்வுக்கு பிறகு அங்கிருந்த சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான 100 ஏக்கர் நிலத்தை அஸ்ராம் பாபு கைப்பற்றிக் கொண்டார். 2000-ல் குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் பைரவி கிராமத்தில் அவரது ஆசிரமத்திற்கு 10 ஏக்கர் நிலம் அரசால் வழங்கப்பட்டது. மேலும் 6 ஏக்கர் நிலத்தை அஸ்ராம் பாபு கையகப்படுத்தவே கிராம மக்கள் பல முறை புகார் தெரிவித்து, அதன் பிறகு ஒரு வழியாக ஆக்கிரமிப்பை அகற்ற புல்டோசர் வரவேண்டியதாயிற்று.
அஸ்ராம் ஆசிரமத்தின் முன்னாள் உறுப்பினரான ராஜூ சாந்தக் என்பவர் ஆசிரமத்தில் தாந்த்ரீக யோகம் அடிப்படையிலான பெண்கள் மீதான பாலியல் மோசடிகள் தொடர்ந்து நடப்பதாக போலீசில் புகார் தெரிவித்தார். இதற்காக 2009 டிசம்பரில் அஸ்ராம் பாபு உள்ளிட்ட 3 பேரால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஜீலை 5, 2008-ல் குஜராத்தின் அகமதாபாத் நகரில் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அவரது ஆசிரமத்தில் 10,11 வயதுடைய இரு மாணவர்கள் (தீபேஸ் மற்றும அபிஷேக் வகீலா) மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுபற்றி ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி டி.கே. திரிவேதி கமிசனின் அறிக்கை கடந்த ஜூலை 31-ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ஒருபால் உறவிலும் நாட்டமுடையவர் இந்த சாமியார் என்றும் சொல்லப்படுகிறது. அது உண்மையானால் எத்தனை பையன்கள் மற்றும் இளைஞர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்களோ தெரியவில்லை. “சகோதரன் என்று விளித்திருந்தாலும், விட்டுவிடுமாறு கெஞ்சியிருந்தாலும் தவறு நடந்திருக்காது”
கடந்த ஆண்டு டிசம்பர் 16 அன்று தில்லி-ல் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவியை 6 பேர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் நடந்த போது தனது திருவாயை மலர்ந்தருளினார் அஸ்ராம் பாபு. அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளிக்கு நிகராக நடந்த தவறுக்கு பொறுப்பு என்றும், அவள் அவர்களை சகோதரன் என்று விளித்திருந்தாலும், விட்டுவிடுமாறு கெஞ்சியிருந்தாலும் தவறு நடந்திருக்காது என்றும், ஒரு கையைத் தட்டி மட்டும் ஓசை வராது என்றும் அப்போது அவர் கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டார். இதற்காக இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு முசாபர்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவதிலிருந்து திங்கட்கிழமைதான் விலக்கு அளிக்கப்பட்டது.
தற்போது இவரே நேரடியாக பாலியல் வல்லுறவு வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளார். தில்லி வழக்குக்கு சொன்ன கருத்தை அவர் இப்போதும் சொல்லக் கூடும். அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு வகையில் குற்றவாளி என்று சொல்லக் கூடும். எல்லா மத, ஆன்மீக வாதிகளும் பெண்களை பாலியல் வன்முறை செய்வதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
இத்தகைய சாமியார்களை வைத்துத்தான் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவோம் என்று சங்க பரிவாரங்கள் உறுதி பூண்டிருக்கின்றன. நாமும் இவர்களை ஒழிப்பதற்கு உறுதி பூணுவோம்.vinavu.com

கருத்துகள் இல்லை: