வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

10 கோடிக்கு மேல் வருமானத்திற்கு 35 வீதமாக வரியை உயர்த்த அரசு யோசனை !

புதுடில்லி: ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல், வருவாய் ஈட்டும் பெரும்பணக்காரர்களுக்கான வரியை, 35 சதவீதமாக உயர்த்துவது குறித்து, மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. தற்போது, ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். நேரடி வரிகள்: லட்சத்தில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு, 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு, 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, வருமான வரியின் அடிப்படையில், 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்த அட்டவணையில், மேலும், ஒரு பிரிவை சேர்க்க, மத்திய நிதிஅமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, 10 லட்சத்தில் இருந்து, 10 கோடி ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 30 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, 35 சதவீதமும் வரி விதிக்கப்பட உள்ளது என, நிதிஅமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேரடி வரிகள் விதிமுறைகளில், புதிய வரி விதிப்பு உட்பட, பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்படும். இதையடுத்து, தற்போதைய மழைக்கால பார்லிமென்ட் கூட்டத் தொடரில், சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். அவ்வாறு, தாக்கல் செய்யப்படாத பட்சத்தில், வரும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத் தொடரில், இந்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என, அந்த அதிகாரி மேலும் கூறினார். பார்லிமென்ட் ஒப்புதலுக்குப் பிறகு, வரும், 2015ம் ஆண்டு, ஏப்ரல் முதல், புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. நடப்பு நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, வருமான வரியுடன், 10 சதவீதம் கூடுதல் வரி வசூலிக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.



வரிச்சலுகை:
இத்துடன், அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைக்கான வரிச் சலுகை, உயர்கல்விக் கடனுக்கான வட்டிக்கு, 8 ஆண்டுகள் வரை, வரிவிலக்கு அளிப்பது, உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க, மத்திய அமைச்சரவைக் குழு, டில்லியில் நேற்று கூடியது. ஆனால், நேரடி வரிகள் சட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முடிவு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, கல்விக் கட்டணம் உள்ளிட்டவற்றுடன், மாற்றுத் திறனாளிகளின் மருத்துவச் சிகிச்சைக்கும், ராஜிவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்பு திட்ட முதலீடுகளுக்கும் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. அதே சமயம், நேரடி வரிகள் விதிமுறைகளின் கீழ் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து, நிதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு அளித்த அனைத்து பரிந்துரைகளையும், நிதியமைச்சகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. உதாரணமாக, வருமான வரிக்கான வரம்பை, 2 லட்சத்தில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதை செயல்படுத்தினால், ஆண்டுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், இந்த பரிந்துரையை நிதியமைச்சகம் ஒதுக்கி தள்ளி விட்டது. இதே போன்று, பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்.டி.டி.,) முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை நிராகரித்த, நிதியமைச்சகம், வரியை மட்டும் சற்று குறைத்துள்ளது. மேலும், டிவிடெண்டு வினியோகத்திற்கு, வரி விதிக்கும் திட்டத்தையும், மத்திய நிதியமைச்சகம் நிராகரித்து விட்டது. அதே சமயம், ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட டிவிடெண்டு வருவாய்க்கு, 10 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, முதலீட்டாளர்களின் டிவிடெண்டு வருவாய்க்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, நிறுவனங்களிடம் இருந்து 15 சதவீதம், டிவிடெண்டு வினியோக வரி வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



அரசுக்கு பயன் அளிக்குமா?
கடந்த, 2011-12ம் ஆண்டு நிலவரப்படி, 1.30 லட்சம் பேர், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் பங்களிப்பு, தனி நபர் வருமான வரி மொத்த வசூலில், 63 சதவீதமாக உள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியதாக, 42,800 பேர் கணக்கு காட்டியுள்ளனர் என, ப.சிதம்பரம் பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்த்தால், வரி விதிப்புக்கு உள்ளாக உள்ள, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் உள்ளோரின் எண்ணிக்கையும், வரி வசூலும் மிகக் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை: