செவ்வாய், 25 ஜூன், 2013

காங்கிரஸ் தி.மு.க.வை ஆதரிக்கும் ! ஞானதேசிகன் அறிவிப்பு ராஜ்யசபா தேர்தல் கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, டெல்லி மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வை ஆதரிக்கும் என்று அவர் அறிவித்தார். 
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க. சார்பில் 4 வேட்பாளர்களும், தி.மு.க., தே.மு.தி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் சார்பில் தலா ஒரு வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளரின் வெற்றி உறுதியாகிவிட்டது. எனவே, மீதமுள்ள ஒரு உறுப்பினர் பதவியை பெறுவதில், தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கும், தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனுக்குமிடையே கடும் போட்டி இருந்தது.
23 எம்.எல்.ஏ.க்கள் பலம் கொண்ட தி.மு.க. மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சியின் ஆதரவை பெற்று தனது பலத்தை 27 ஆக உயர்த்தியது. இன்னும் தேவைப்படும் 7 எம்.எல்.ஏ.க்களுக்காக பா.ம.க.வின் 3 உறுப்பினர்களை நம்பினார்கள். ஆனால் பா.ம.க. ஆதரவு தர முடியாது என்று கைவிரித்து விட்டது. மேலும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்து விட்டது. எனவே, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவதற்காக டெல்லியில் முகாமிட்டிருந்த டி.ஆர்.பாலு எம்.பி., மூத்த தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். இதே போல் தே.மு.தி.க.வும் காங்கிரசின் ஆதரவை பெறுவதில் முனைப்புடன் களமிறங்கியது. அந்த கட்சி சார்பில் எல்.கே. சுதீஸ் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.


இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின்போது, தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க பெரும்பாலான நிர்வாகிகள் விரும்பினர். இந்த ஆலோசனை சோனியாவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, டெல்லி மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வை ஆதரிக்கும் என்று அவர் அறிவித்தார். இதனால் கனிமொழிக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியாகிவிட்டதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி முடிவு தே.மு.தி.க. வேட்பாளருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: