திங்கள், 24 ஜூன், 2013

சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம்

 சென்னை : மழை பெய்யாததால் புழல் ஏரி வறண்டுவிட்டது. கிருஷ்ணா நீரும் வரவில்லை. இதனால் சென்னைக்கு வரும் குடிநீர் முற்றிலுமாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஏரி மைதானம் போலிருப்பதால் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். குண்டு குழிகளில் கிடக்கும் தண்ணீரில் அப்பகுதியினர் துணி துவைத்து, குளித்து மாசுபடுத்துகின்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமானது புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தற்போது இருப்பு 568 மில்லியன் கன அடி. இதில் சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 153 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்தாண்டு இதே தேதியில் 1073 மில்லியன் கன அடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதகு திறக்கும் இடம், ஜோன்ஸ் டவர் திண்டு, ஆலமரம் பகுதி, எராங்குப்பம், பம்மதுகுளம், பொத்தூர், திருமுல்லைவாயல், ஒரகடம், முருகாம்பேடு, சூரப்பேடு ஆகிய பகுதிகளில் முற்றிலும் தண்ணீர் வற்றி வறண்டுபோய் கிடக்கிறது.


நேற்று விடுமுறை என்பதால் அப்பகுதியில் பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடினர். எப்போதும் நீர் நிரம்பியிருக்கும் மதகு அருகே தண்ணீர் இல்லாததால் அப்பகுதியினர் விளையாட்டு மைதானமாக பயன்படுத்துகின்றனர். 2004ல்தான் இதுபோன்று வறண்டு இருந்தது. இப்போது அந்த நிலை காணப்படுகிறது. சுற்றுவட்டார பகுதியினர் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இங்குவந்து குண்டு குழியில் கிடக்கும் தண்ணீரில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த தண்ணீரும் மாசடைந்துள்ளது.

கிருஷ்ணா நீரும் தற்போது வரவில்லை. இம்மாதம் மழை பெய்யாவிட்டால் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் அபாய நிலை ஏற்படும் என அஞ்சுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புழலேரிக்கு தண்ணீர் அனுப்பும் சோழவரம் ஏரியும் முற்றிலும் வற்றிவிட்டது. அங்குள்ள குண்டு, குழியில் இருந்த தண்ணீரும் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டு ஏற்கனவே புழலேரிக்கு அனுப்பப்பட்டு விட்டது. இப்போது அந்த ஏரியும் முற்றிலுமாக வறண்டு கிடக்கிறது dinakaran.com

கருத்துகள் இல்லை: