சீனிவாசன் நாடறிந்த ஊழலை செய்தவர்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் இங்கே கிரிக்கெட் எந்த இலட்சணத்தில் இருக்கும் என்பதை யாரும் தனியே விளக்கத் தேவையில்லை.
டிஎன்சிஏ என்றழைக்கப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 83-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த ஞாயிற்று கிழமையன்று நடைபெற்றது. இதில் கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசன் தொடர்ந்து 12-வது முறையாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் போல துணைத் தலைவர்கள், இணைச் செயலர், உதவி செயலர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக மீண்டும் என் சீனிவாசன்
இங்கிலாந்தில் ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் இந்திய அணி பெற்ற வெற்றியின் முன்னே சீனிவாசனது சென்னை வெற்றியின் முக்கியத்துவம் பலரது கவனத்திற்கு வராமல் போகலாம்.
பிசிசிஐயின் தற்காலிகத் தலைவர் டால்மியா நிர்வாகப் பணிகளை பார்த்தாலும் ஐபிஎல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சீனிவாசன் தனது  தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மேலும் ஐசிசியின் கூட்டத்தில் பிசிசிஐயின் பிரதிநிதியாக இவரும் கலந்து கொள்வார் என்றே முடிவானது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், சீனிவாசனது மாப்பிள்ளையுமான குருநாத் மெய்யப்பன் மீது சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பெயிலில் வந்தாலும், சீனிவாசனது செல்வாக்கை யாரும் குறைக்க முடியவில்லை. ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்காக டால்மியாவை செயல் தலைவராக கொண்டு வந்தார் சீனிவாசன். இவர் பதவி, பொறுப்புகளிலிருந்து ‘விலகி’ மட்டும் இருந்தாராம். ஆனால் ஐசிசி கூட்டத்தில் இவரும் கலந்து கொள்கிறாராம். இவர் இப்படி ஊழல் குற்றச்சாட்டில் இடம் பெற்றிருக்கிறார் என்று தெரிந்தும் ஐசிசி தலைவர்கள் “ஹலோ மிஸ்டர் சீனிவாசன், எப்படி இருக்கீங்க” என்று குசலம் விசாரிப்பார்களாம்.
முதலாளிகள் என்றதும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், நேர்மை அனைத்தும் எப்படி வளைந்து கொடுக்கிறது பாருங்கள்! பிசிசிஐயிலாவது பெயரளவிலாவது, சீனிவாசன் தலைவர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். அங்கே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலவீனமாகவாவது ஒரு விவாதம் நடந்தது.
ஆனால தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதோடு சீனிவாசனே தலைவர் பதவியையும் கைப்பற்றியிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிடவோ இல்லை எதிர்த்துப் பேசவோ கூட இங்கு ஆளில்லை. தமிழகத்தின் தரத்தை கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை வைத்து மட்டும் மதிப்பிடும் அரசியலற்ற பிழைப்புவாதத்தை முன்னிறுத்தும் ஊடக பிழைப்புவாதிகள்கூட இங்கே ஒப்புக்கு சீனிவாசனை சீண்டுவதில்லை. இப்பேற்பட்ட சீனிவாசனை தமிழன் என்பதற்காக மனுஷ்யபுத்திரனைப் போன்றோர் ஆதரித்திருக்கிறார்கள்.
நாடறிந்த ஊழலை செய்தவர்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் இங்கே கிரிக்கெட் எந்த இலட்சணத்தில் இருக்கும் என்பதை யாரும் தனியே விளக்கத் தேவையில்லை.
முறைகேடாக பணத்தை அள்ள வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஐபிஎல்லின் மூலம் வெளியே வந்த இந்த பெருச்சாளிகள் சட்டத்தின் ஓட்டைகளை வைத்தும், சக முதலாளிகளுக்கு சில எலும்புத்துண்டுகளை வீசியும் தங்களை நியாயவான்களாக சித்தரித்துக் கொள்கிறார்கள்.
இவை எதுவும் தெரியாமல் தானும் ஒரு நாள் ரஞ்சி டிராபி அல்லது இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடுவேன் என்று நினைக்கும் அப்பாவிகளைப் பற்றியும் அந்த அப்பாவிகளை அப்படி ஒரு கனவோடு வளர்க்கும் பெற்றோர் அப்பாவிகளையும் என்னவென்று சொல்ல? vinavu.com