புதன், 26 ஜூன், 2013

அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற போர்வையில் வசூல் வேட்டை! பள்ளிசெல்லாமல் வேலைக்கு செல்லும் மாணவர் அதிகரிப்பு!

சேலம்: அரசு பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், கட்டாய அதிலும், பிளஸ் 1 சேர்க்கையில், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் சேரவே, அனைத்து மாணவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.இதை சாதகமாக பயன்படுத்தி, 500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை, நன்கொடை வசூலிக்கின்றனர்.வசதியில்லாத ஏழை, எளிய மாணவ, மாணவியர் சேர வந்தாலும், அவர்களிடமும், கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதனால், நன்கொடை தர முடியாத பெற்றோர், மாணவர்களை சேர்க்க முடியாமல், வீடு திரும்புகின்றனர். பல மாணவர்கள், கல்வியை தொடர முடியாமல், வேலைக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது.

நன்கொடை வசூலிப்பதாலும், விரும்பும் பிரிவு வழங்காததாலும், பள்ளிக்கு செல்லாமல், வேலைக்கு செல்லும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவு, மே 31ம் தேதி, வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த வாரத்தில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பிளஸ் 1 மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ், பாடப்புத்தகம் உள்ளிட்ட சலுகை மட்டுமின்றி, கல்விக்கட்டணம் உள்ளிட்டவையும் அரசே வழங்கிவிடுவதால், கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனாலும், பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற போர்வையில், அரசியல் கட்சியினர், மாணவர் சேர்க்கையில் தலையிட்டு, வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:ஆத்தூர், வாழப்பாடியை சுற்றிலும், ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இவற்றில், மேல்நிலைப்பள்ளிகளுக்கு, பல கிலோ மீட்டர் தூரம் வரை, பயணித்து வரவேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற அக்கறையில் வரும் பெற்றோரிடம், அரசு பள்ளிகளில் கூட, ஆயிரக்கணக்கில் நன்கொடை வசூலிக்கின்றனர்.அதிலும், மாணவர்கள் கேட்கும் பிரிவுகளை தராமல், குறிப்பிட்ட, பிரிவுகளில் மட்டுமே இடம் உள்ளது என்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு, படிப்பில் ஆர்வம் குறைந்து விடுகிறது. பல பெற்றோர் மாணவர்களை வேலைக்கு அனுப்பி விடுகின்றனர்.இதுகுறித்து, புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதே நிலை நீடித்தால், பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: