திங்கள், 1 அக்டோபர், 2012

Sri lanka Twenty - 20 முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது

உலகக்கோப்பை 20-20 முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது. தற்போது சூப்பர்8 பிரிவு ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன. இதை தாண்டி அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்து இன்னும் ஒரு தெளிவு இல்லை. சூப்பர்8 பிரிவில் குரூப்1ல் இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் உள்ளன. குரூப்2ல் ஆஸி., பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் உள்ளன. குரூப்1ல் இலங்கை 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், இங்கிலாந்து 2 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் 2வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 2 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து 2 ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெறாததால் கடைசி இடத்தில் உள்ளது. இந்த பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறக்கூடிய 2 அணிகள் எவை என்பது இன்று நடைபெறும் ஆட்டங்களின் முடிவில் தெரியவரும்.


இன்று வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் பல்லேகலேயில் பிற்பகல் 3.30 மணிக்கு மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உருவாகும். அதற்கு இரவு 7.30 மணிக்கு இலங்கைக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்க வேண்டும். அப்படி தோற்றால் இலங்கை, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நியூசி.க்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்புக்காக இலங்கை இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அந்த முடிவில் இலங்கை வெற்றி பெற்றால் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், இங்கிலாந்து வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை ஆகிய 3 அணிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

குரூப் 2 பிரிவில் ஆஸி. 2 வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் அதிக ரன்ரேட்டில் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதற்கு அடுத்தார்போல் 2 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்ரிக்கா 2 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. குரூப்2 பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறுவது நாளை மறுநாள் நடைபெறும் ஆட்டத்தில் தான் முடிவாகும்.

கொழும்புவில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆஸி. - பாகிஸ்தான் அணிகள் முதலில் மோதுகின்றன. இதில் ஆஸி. வெற்றி பெற்றால் பாகிஸ்தான் வெளியேறிவிடும். அதன்பிறகு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்தியா - தென் ஆப்ரிக்கா ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். தென் ஆப்ரிக்கா அரையிறுதிக்கு முன்னேற அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வேண்டும். ஒருவேளை ஆஸி.யை பாகிஸ்தான் வீழ்த்தி, தென் ஆப்ரிக்காவை இந்தியா வீழ்த்திவிட்டால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸி., பாகிஸ்தான், இந்தியா முதல் 2 இடங்களில் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். மொத்தத்தில் இன்றும், நாளையும் நடக்கும் 4 ஆட்டங்கள் 8 அணிகளின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.

கருத்துகள் இல்லை: