சனி, 6 அக்டோபர், 2012

ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியில் நடிகை மந்த்ரா

நடிகை மந்த்ரா நீண்ட நாட்களுக்குப் பின்னர் சின்னத்திரையில் ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ரசிகர்களிடையே நேரடி தொடர்பு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது, பங்கேற்பாளர்களின் பொது அறிவு பிரமிக்க வைக்கிறது என்றார் நடிகை மந்த்ரா.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயிரத்தில் ஒருவன் என்ற கேம்ஷோ ஒளிபரப்பாகிறது. அபர்ணா பிள்ளை இயக்கும் இந்த நிகழ்ச்சியை சுப்பு பஞ்சு தொகுத்து வழங்கினார். தற்போது இதனை நடிகை மந்த்ரா தொகுத்து வழங்குகிறார். இந்தவாரம் சமையல் கலை வல்லுநர் மல்லிகா பத்ரிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

அருண் விஜயுடன் திரைப்படத்தில் அறிமுகமாகி அஜீத், விஜயுடன் நடித்த நடிகை மந்த்ரா, டைரக்டர் நிவாசை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்குப் போனவரை இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற மந்த்ராவிற்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளதாம்.
இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுடனான என் பிணைப்பு இப்போது இன்னும் இறுகியிருக்கிறது. அந்த விதத்திலும் இந்த நிகழ்ச்சி எனக்கு ஸ்பெஷல்'' என்று மந்த்ரா கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றது பற்றி பேசிய மந்த்ரா, "ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியில் நேயர்களின் திறமை பார்த்து நானே பிரமித்து விட்டேன். குறிப்பாக கவியரசர் கண்ணதாசனை பற்றி பேச்சு வந்தபோது, பாடல்களை அவர் எந்தெந்த சூழலில் எழுதினார் என்ற தகவல்களை அவர்கள் உற்சாகமாய் தந்தார்கள். இத்தனை விஷயம் கவியரசர் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று வியப்பு ஏற்பட்டது. அவரின் ஆழ்ந்த புலமை எப்படி சூழ்நிலையோடு இணைந்திருந்தது என்பதில் வியப்பும் ஏற்பட்டது. புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள இது நல்ல மேடை" என்றார்.
"சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வித்தியாசமானது, புதுமையானது என்ற பெயரை எடுத்த எடுப்பிலேயே பெற்றிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி. நேயர்களின் தனித்திறனை புடம் போட்ட பொன்னாக வெளிக்கொணர்ந்து அதற்குப் பரிசும் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தனித்துவம் தெரிகிறது. பொது அறிவில் அவர்கள் அற்புதமாகத் தேர்ந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுடன் எனக்கு நேரடித்தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அபர்ணா பிள்ளை என்றும் என் நன்றிக்குரியவர் என்றும் நடிகை மந்த்ரா கூறினார்.
ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி ஜி தமிழ் தொலைக்காட்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிகை மந்த்ரா அழகாக தமிழ் பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்ரிநாத், லஸ்சி, சீடை, மணத்தக்காளி போன்றவைகளைப்பற்றியும் சமையல் குறிப்புகளை கூறியது நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை அளித்தது.

கருத்துகள் இல்லை: