ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

அடுத்த சபாநாயகர் பன்னீர்செல்வமா? செங்கோட்டையனா

சென்னை: தமிழக சட்டசபையின் அடுத்த சபாநாயகராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் அடிபடுகிறது.
தமிழக சட்டசபையின் சபாநாயகர் ஜெயக்குமார் நேற்று காலை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் துணை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார். இதனையடுத்து அவரது பணிகளை துணை சபாநாயகர் ப. தனபால் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், மூத்த அமைச்சராகவும் இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். அவர் சமீபத்தில் பயங்கர சர்ச்சையில் சிக்கியதால் அவரது அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பதவி மற்றும் அமைச்சர் பதவி ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா பறித்தார். ஆட்சியிலும், கட்சியிலும் பதவியை இழந்த அவர் கடந்த சில காலமாக அமைதியாகவே வலம் வந்து கொண்டுள்ளார்.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதாலும், செங்கோட்டையனுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் அவரை சபாநாயகராக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெயரும் இந்த லிஸ்ட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம், சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஜெயக்குமார் மீண்டும் அமைச்சராக்கப்படலாம் என கூறப்படுகின்றது. ஜெயக்குமார் மீது ஜெயலலிதா கோபமாக இருந்தாலும் கூட வடசென்னையில் ஜெயக்குமாரைத் தாண்டி அரசியல் செய்வது சாத்தியமாகாது என்பதால் சற்று இறங்கிப் போக ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை ஜெயக்குமாரே இனி வேண்டாம் என்று ஜெயலலிதா முடிவு செய்தால், கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது கட்சியை விட்டு நீக்கப்பட்ட சேகர்பாபுவை மீண்டும் கட்சி்க்குள் இழுத்து வட சென்னை அதிமுகவை காப்பாற்ற ஜெயலலிதா முயலலாம் என்று தெரிகிறது. ஜெயக்குமாரின் பரம வைரிதான் சேகர்பாபு என்பது நினைவிருக்கலாம். மேலும் இவர் அவைத் தலைவர் மதுசூதனின் உறவினரும் ஆவார்.

கருத்துகள் இல்லை: