செவ்வாய், 2 அக்டோபர், 2012

ஜெயலலிதாவின் புதிய சபாநாயகர் தனபால்

சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் ராஜினாமா செய்ததை அடுத்து, தமிழக சட்டப்பேரவை வரும் 10-ம் தேதி கூடுகிறது. அப்போது, புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக ப.தனபால் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி 2011ம் ஆண்டு அமைந்ததும், புதிய சபாநாயகராக ராயபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டார். அவர் திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்ததையடுத்து, புதிய சபாநாயகர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வரும் 9-ம் தேதி நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பேரவை செயலாளரால் பெற்றுக் கொள்ளப்படும். அ.தி.மு.க.-வுக்கு சட்டசபையில் 151 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் ஜெயலலிதா அறிவித்துள்ள வேட்பாளர், புதிய சபாநாயகராக வெற்றி பெறுவார்.போட்டியின்றி தனபால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
சேலம் மாவட்டம் தடாகபதி பெரியார் குடியிருப்பைச் சேர்ந்த தனபால், எம்ஏ பட்டதாரி. வயது 61. சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார். 1977-ம் ஆண்டு முதல் முறையாக எம்எல்ஏவானார். 1984, 1985, 2001, 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2001-ம் ஆண்டு சில மாதங்கள் உணவுத் துறை அமைச்சராக பணியாற்றினார். தற்போது, ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று, துணை சபாநாயகராக உள்ளார்.
ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டம், கோஷ்டி அரசியல், முதல்வராகும் ஆசை ஆகியவை ஏதும் இல்லாவிட்டால், இந்த ஆட்சி முடியும்வரை தனபால், சபாநாயகராக இருக்கலாம். ஜாக்கிரதையாக இருங்கண்ணே

கருத்துகள் இல்லை: