வியாழன், 4 அக்டோபர், 2012

மேதகு வேண்டாம்; பிரணாப் அறிவுரை

புதுடில்லி :ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, "அழைப்பிதழ்களில், என் பெயருக்கு முன், "மேதகு' மற்றும் "மாண்புமிகு' போன்ற வார்த்தைகளை போட வேண்டாம். "ஸ்ரீ' என்ற வார்த்தையை போட்டால் போதும்' என, தன்னை, நிகழ்ச்சிகளுக்கு அழைப்பவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மரபுகளை தகர்த்தெறிந்து, "மக்களின் ஜனாதிபதி' என, பெயரெடுத்த பெருமை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சேரும். இவர், ஜனாதிபதியாக இருந்தபோது, ஆடம்பரங்களை தவிர்த்து, எளிமையை பின்பற்றினார். நாட்டின் முதல் குடிமகனாக இருந்தாலும், சாதாரண மக்களுடன் நெருக்கம் காட்டி வந்தார்.தற்போதைய ஜனாதிபதியான, பிரணாப் முகர்ஜியும், சமீபகாலமாக எளிமையை பின்பற்ற துவங்கியுள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது:பீகாரில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், பட்டமளிப்பு விழாவுக்கு தலைமையேற்கும்படி, பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்திருந்தது. பிரணாபும், இதற்கு சம்மதம் தெரிவித்தார். சில நாட்களுக்கு பின், அந்த பல்கலையிலிருந்து, பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழ் வந்தது.அதில், விழாத் தலைமை என, ஜனாதிபதியின் பெயர் குறிப்பிடப்பட்டு, அவரது பெயருக்கு முன், "மேதகு' என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது.

இதைப்பார்த்த ஜனாதிபதி, தன் பெயருக்கு முன், "மேதகு' மற்றும் "மாண்புமிகு' போன்ற வார்த்தைகளை போட வேண்டாம் என்றும், விழாவுக்கு வரும், மற்ற விருந்தினர்களின் பெயர்களுக்கு முன், "ஸ்ரீ' என, போட்டிருப்பது போல், தன் பெயருக்கு முன்னும், "ஸ்ரீ' என, போட்டாலே போதும் என்றும் தெரிவித்து விட்டார்.இது தவிர, விழா மேடையில், தனக்கான இருக்கையை போடும்போது, உயரமாகவும், ஆடம்பரமானதாகவும் உள்ள இருக்கையை போட வேண்டாம் என்றும், மற்ற விருந்தினர்களுக்கு என்ன இருக்கை போடப்படுமோ, அதே போன்ற சாதாரண இருக்கையை, தனக்கும் போட வேண்டும் என்றும், கட்டாயமாக கூறி விட்டார்.இந்த தகவல், சம்பந்தப்பட்ட பல்கலை நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏற்கனவே அச்சிட்ட அழைப்பிதழ்களுக்கு பதிலாக, புதிய அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. அதில், ஜனாதிபதியின் பெருக்கு முன், "மேதகு' என்ற வார்த்தைக்கு பதிலாக, "ஸ்ரீ' என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது.இவ்வாறு, ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை: