வியாழன், 29 மார்ச், 2012

சேது திட்டம்-நிறைவேற்ற கோரி திமுக அமளி-தேசிய சின்னமாக்க அதிமுக அமளி

டெல்லி: சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கை துரிதமாக்கக் கோரியும், அத்திட்டத்தை மீண்டும் துவங்கக் கோரியும் திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினரும் கோஷமிட்டனர். இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கை துரிதமாக்கக் கோரி இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக, தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு எழுந்து, சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார்.
பதிலுக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் எழுந்து முதல்வர் ஜெயலலிதா கூறியபடி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றார். இதற்கு பாஜகவினரும் ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதே போல ராஜ்யசபாவிலும் திமுக, தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோர, அதிமுக- பாஜக எம்பிக்கள் அதை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி கோஷமிட்டனர். இதற்கு பாஜகவினரும் ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.

இதனால் அங்கும் பெரும் அமளி ஏற்பட்டதையடுத்து ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் சபை கூடியதும் இதே பிரச்சனையை எழுப்பியதால் 2வது முறையாகவும் ஒத்தி வைக்கப்பட்டது.

அதே போல மக்களவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியதும் விஜயசாந்தி உள்ளிட்ட ஆந்திர எம்.பி.க்கள் எழுந்து தெலுங்கானா கோரிக்கையை எழுப்பினார்கள். இதனால் சபையில் அமளி ஏற்பட்டு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: