திங்கள், 26 மார்ச், 2012

மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஜெயலலிதாவின் அலட்சியம்

கடந்த தி.மு.க., ஆட்சியில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தற்போது குறைந்து உள்ளது. ஆட்சி அமைந்த பிறகு, சுழல் நிதி வழங்குவதிலோ, மானியம் பெற்று தருவதிலோ அரசு முனைப்பு காட்டவில்லை என, மகளிர் சுய உதவி குழுவினர் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் ஜோர்: கடந்த தி.மு.க., ஆட்சியில், சமூகநல துறை வசமிருந்து, இந்த குழுக்களின் கட்டுப்பாடு, ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறையை, தன் வசம் வைத்திருந்த துணை முதல்வரான ஸ்டாலின், மாதத்தில் பாதி நாட்கள் மகளிர் சுய உதவிக் குழு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதன் முக்கியத்துவத்தை மேலும் கூட்டினார். அரசின் ஆர்வம் காரணமாக, வங்கிகள் போட்டி போட்டு கடன் வழங்க முன்வந்தன. கடந்த தி.மு.க., ஆட்சியில், 1.50 லட்சம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 20 லட்சம் பெண்கள் உறுப்பினர் ஆக்கப்பட்டனர்
. 2006-10 ஆண்டு வரை, இரண்டு 2,81,883 குழுக்களுக்கு, 281.88 கோடி ரூபாய் சுழல்நிதியும்; 1,164 கோடியே 23 லட்சம் வங்கி கடனாகவும் வழங்கப்பட்டது. தெருவோர உணவு விடுதி, ரேஷன்கடை நடத்துதல் என, பல புதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு, இடைத்தேர்தல் நேரத்தில் பணப் பட்டுவாடாவிற்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களை, தி.மு.க., பயன்படுத்திக் கொண்டது.ஜெயலலிதாவின் அலட்சியம் 

அறிவிப்பு என்ன ஆச்சு? தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட குழுக்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ, தற்போது முதல்வரோ, அமைச்சர்களோ இந்த குழுக்களை பற்றி பேசுவதையே தவிர்த்து வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், "இந்த ஆண்டில் (2011-12), 65 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்களும், 4,000 கோடி ரூபாய், கடனாகவும் வழங்கப்படும்; பொருளாதாரக் கடன் உதவியை, ஐந்து லட்சத்தில் இருந்து, 10 லட்சமாகவும்; மானியத் தொகையை, 25 சதவீதமாகவும் உயர்த்தி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆட்சி அமைந்து, 10 மாதமாகியும், மகளிர் சுய உதவிக் குழுக்களை துவங்குவதிலோ, ஏற்கனவே இயங்கி வரும் குழுக்களுக்கு கடன், மானியம் பெற்று தருவதிலோ, அரசு அக்கறை காட்டவில்லை என, இந்த குழுவினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, மகளிர் சுய உதவிக் குழு, தலைவி ஒருவர் கூறுகையில், ""கடந்த ஆட்சியில், துணைமுதல்வர் வசம் துறை இருந்ததால், எங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. தற்போது புதிய குழுக்கள் துவங்குவதிலோ, கடன், சுழல்நிதி வழங்குவதிலோ அரசு அக்கறை காட்டவில்லை. கடந்த 10 மாதத்தில், மகளிர் சுய உதவிக் குழு தொடர்பாக, அரசு நடத்திய நிகழ்ச்சிகளை, விரல் விட்டு எண்ணிவிடலாம்'' என்றார்.

பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு: தமிழக முதல்வர் சமீபத்தில் வெளியிட்ட, "தொலைநோக்கு திட்டம் 2023' ஆவணத்திலும், மாநிலம் முழுவதும் பரவியுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் குறித்து, எந்த தகவலும் இல்லை. 76 லட்சம் பெண்களை கொண்ட, மிகப் பெரிய அமைப்பாக உருவெடுத்துள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, மறுபடியும், "மவுசு' வருமா என்பதற்கான பதிலை, பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர், அரசு அதிகாரிகள்.

தொண்டு நிறுவனங்களுக்கு "செக்' வைக்கப்படுமா? தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 452 தொண்டு நிறுவனங்கள் தவிர, ஏராளமான தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைக்கின்றன. இவர்களுக்கு, குழு அமைப்பு மற்றும் கண்காணிப்பு கட்டணம், வங்கி கடன் பெற்று தருவதற்கான ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அரசுக்கும், மகளிருக்கும் பாலமாக செயல்பட வேண்டிய, தொண்டு நிறுவனங்களில் ஒரு சில அமைப்புகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக, தாங்கள் மட்டுமே பலன் அடைந்து வருகின்றன.

இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: இந்த குழுக்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தொண்டு நிறுவனம் நினைத்தால், ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் பெண்களை திரட்டி போராட வைக்க முடியும். அந்த அளவுக்கு இவை செல்வாக்கு பெற்றுள்ளன. மகளிர் நலனுக்காக அரசும், வங்கிகளும் வழங்கும் கடன், மானியம் போன்றவை, இவர்களால் தான் கிடைக்கிறது என்ற போலியான நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் மொத்த எண்ணிக்கை, 4,91,311.
* மொத்த உறுப்பினர்கள், 76.60 லட்சம்.
* மொத்த சேமிப்புத்தொகை, 2,973 கோடி.
* வங்கிக்கடன் இணைப்பு பெற்ற சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை, 4,51, 248.
* மொத்த வங்கி கடன்தொகை, 11,603 கோடியே 83 லட்சம்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: