வியாழன், 29 மார்ச், 2012

Gujarat உயிர்தப்பிய ஒருவரின் தைரியம்

அகமதாபாத் ஷா இ ஆலம் நிவாரண முகாம் 10,000 க்கும் அதிகமான தப்பிப் பிழைத்தவர்களுக்கான மிகப்பெரிய முகாம். அதன் முற்றத்தில் சிதறிக் கிடக்கும் மனித எச்சங்களில் சாய்ரா (வயது 12), அப்ஸனா (வயது 11), நைனா (வயது 12), அஞ்சு (வயது 12 ), ருக்சத் (வயது 9), நீலோபர் (வயது 10), நீலோபர் (வயது 9), ஹேனா (வயது 11) ஆகியோரும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் நரோடா பாடியாவில் தப்பிப் பிழைத்தவர்கள். எந்தக் குழந்தையும் பார்க்கக் கூடாதவற்றை அவர்கள் பார்த்திருக்கிறார்கள், எந்தக் குழந்தையும் கற்றிருக்கக் கூடாத வார்த்தைகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
“பலாத்கார்” (பாலியல் வன்முறை) -என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியும். “மெயின் பதாவூம் தீதீ?” (நான் சொல்லட்டுமா, அக்கா?), “பலாத்கார் கா மத்லப் ஜப் அவுரத் கோ நங்கா கர்தே ஹைன், அவுர் பிர் உசே ஜலா தேத்தே ஹைன்” (பாலியல் வன்முறை என்றால் ஒரு பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு, பிறகு எரிக்கப்படுவது). அதன் பிறகு அவள் தரையை நோக்கி வெறித்துப் பார்க்கிறாள். ஒரு குழந்தை மட்டுமே இப்படி பேச முடியும்.
நரோடா பாடியாவில் இதுதான் மீண்டும் மீண்டும் நடந்தது. பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு, எரிக்கப்பட்டனர். (‘தப்பி பிழைத்தவர்கள் பேசுகிறார்கள், ஒரு மகளிர் குழுவின் உண்மை அறிதல்’ ஏப்ரல் 16, 2002 – பக்கம் 13)
சிதைக்கப்பட்ட அந்த பெண்களில் எதுவும் மிச்சமில்லை – உடல்கள், தடயங்கள், நீதி எதுவும் மிச்சம் இல்லை. இந்த சிறுபெண்ணின் மனதில் ஏற்பட்டுள்ள வடுக்களைத் தவிர எதுவும் எஞ்சியிருக்கவில்லை. எனக்கு இன்னும் அவளது முகம் நினைவில் இருக்கிறது. இன்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் எங்கே இருக்கிறாள், எப்படி கொலையும் பாலியல் வன்முறையும் நிரம்பிய மன பிம்பங்களுடன் வாழ்க்கையில் பயணிக்கிறாள் என்று நினைத்துப் பார்க்கிறேன். இத்தனை குழந்தைப் பருவங்களை வெட்டிச் சிதைத்த, அதற்காக தண்டிக்கப்படாமல் தப்பித்து விட்ட அந்த ஆண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். தனது குடிமக்களை பாதுகாப்பதற்கான அரசியல் கடமை உடைய அரசு தனது சொந்த குடிமக்களின் படுகொலையில் கூட்டுச் சதி செய்தது குறித்து மீண்டும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.

காயம் ஒன்று இருக்கிறது

குஜராத்தில் இனப் படுகொலைக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நான் திரும்பிப் பார்க்க முயற்சிக்கிறேன். ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்கள் மற்றும் ஆர்வலர்கள் போலவே எனக்கும் அது முடியாத ஒன்றாக இருக்கிறது. நிகழ்காலத்தின் பிரிக்க முடியாத பகுதியாக விளங்கும் ஒன்றை எப்படி திரும்பிப் பார்க்க முடியும்? அதனால், எப்போதும் இருக்கும் தொடர்ந்து இருக்கும் ஆழமான காயமாக குஜராத் இருக்கிறது. 2002ல் நான் அடிக்கடி அழுதிருக்கிறேன். நான் இன்னும் அழுகிறேன். அதுதான் சரி என்று நினைக்கிறேன். ஏனெனில் குஜராத் நம்மைக் கூட்டாக அழ வைக்க வேண்டும். ஒரு தேசம் ஆக நம்மை நாமே உண்மையிலேயே வெட்கப்படச் செய்ய வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது வரலாறு படுத்தப்பட மறுக்கும் வகையிலான கிளர்ச்சியாக உள்ளது. எந்த ஒரு வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களிலும் அதை அடக்கம் செய்து முற்றுப் புள்ளி வைத்து விட முடியாது. அதற்கான காரணத்தின் ஒரு பகுதி – பிப்ரவரி-மார்ச் 2002க்கும் வெகு காலத்துக்குப் பிறகும் அது தொடர்ந்து கொண்டிருப்பது, அழித்தொழிக்கப்பட்ட முஸ்லீம் குடும்பங்களின் அச்சுறுத்தப்பட்ட பல டஜன் சிறு வாழ்க்கைகளில், வெளிப்பார்வைக்கு கொழித்துக் கொண்டிருக்கும் நகரங்களின் மாநகரங்களின் விளிம்புகளில் ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மறுவாழ்வு குடியிருப்புகளில்’ உழன்று கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைகளில் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது. அந்த காரணத்தின் இன்னொரு பகுதி, நியாயத்துக்கான போராட்டங்கள் இன்னும் பல நீதிமன்றங்களில் தைரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதும், அதைப் பற்றிய விவரிப்பு இன்னும் வெளியாகிக் கொண்டிருப்பதும். ஆனால், காரணத்தின் பெரும்பகுதி, குஜராத் நிகழ்வுகள் இந்தியாவுக்கு இழைத்ததன் அர்த்தம் இன்னமும் போட்டி விவாதக்குட்பட்டதாகவே இருப்பதாகும்.
“போகட்டும் விடுங்க, நடக்க வேண்டியதை பாருங்கள். ஏன் இந்த ஆர்வலர்கள் இந்த ‘மகிழ்ச்சியற்ற’ கடந்த காலத்தை திரும்பத் திரும்பக் கிளறி கொண்டே இருக்கிறார்கள்? 10 வருடங்கள் ஆகிவிட்டன” என்று சிலர் சொல்கிறார்கள். ஏன்? ஏனென்றால் சிலர் விரும்புவது போன்ற திரைக்கதையின் அடிப்படையில் கடந்த காலத்தை முடிவு கட்டினால், அது நமது நிகழ்காலத்தின் அர்த்தத்தை சிதைப்பதோடு எதிர்காலத்தையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது. இந்த வாக்குவாதங்கள் நீதிமன்றங்களில் நடத்தப்பட வேண்டிய போராட்டங்களைப் பற்றியவை மட்டும் இல்லை. இந்த வாக்குவாதம் குடியுரிமையின் அர்த்தத்தைப் பற்றியது. இது குடிமக்கள் மற்றும் அரசுக்கு இடையே உள்ள உறவை பற்றியது. அரசாங்கத்தின் தண்டனையைத் தாண்டிய நிலையைப் பற்றியது. குஜராத் என்பது மறப்பதற்கு எதிராக, கூட்டு நினைவைக் கைப்பற்றுவதற்கான போராட்டம். ஏனென்றால் கடைசியில் அது இந்தியா என்ற ஆதர்சத்துக்கான போராட்டமாக உள்ளது.
இந்தியா அதன் சிறுபான்மையினர் கௌரவமாகவும் குடியுரிமையின் முழு உரிமைகளுடனும் வாழ்வதற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தை 1950 ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. மீண்டும் மீண்டும், அந்த புனிதமான வாக்குறுதி மீறப்பட்டிருக்கிறது – தில்லி, நெல்லி, மீரட், பகல்பூர், ஹாஷிம்புரா, கந்தர்மால், குஜராத் மற்றும் மிகச் சமீபத்தில் கோபால்கர் (செப்டம்பர் 2011) என்று ஒவ்வொரு நிகழ்விலும், அவர்களது சிறுபான்மை அடையாளத்துக்காகவே, அவர்கள் யார் என்பதற்காகவே அப்பாவிகள் கொல்லப்படவும், முடமாக்கப்படவும், பாலியல் தாக்குதலுக்குட்படுத்தப்படவும், வீட்டிலிருந்தும் சமையலறையிலிருந்தும் எரிக்கப்பட்டு காற்றில் வீசப்படவும் செய்யப்பட்டார்கள்.
குறிவைக்கப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும், அரசாங்கத்தின் அலுவலர்கள் ஒரு பக்க சார்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பாதுகாக்கவும், வழக்கு தொடரவும், நீதி வழங்கவும் உள்ள தமது கடமையிலிருந்து தவறியிருக்கிறார்கள். இப்படியே எவ்வளவு காலம் போக முடியும்? அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசாங்கத்தின் வல்லமையையும் துப்பாக்கிகளையும் போலீசையும், சைரன்களையும் குடிமக்களின் ஒரு குழுவினருக்கு எதிராக பயன்படுத்தவும் அதற்கு பதில் சொல்லப் பொறுப்பில்லாமலும் எவ்வளவு காலம் தப்ப முடியும்? அரசு நிறுவனத்தின் நிறுவன சார்புநிலைகள் எந்த நாகரீக ஜனநாயகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதுதான் குஜராத் சொல்லும் பாடம்.

சவால்கள்

குஜராத் படுகொலை ஒரு தேசமாக நமக்கு முன் பல சவால்களை முன் வைக்கிறது. நமது இதயங்களிலும் சமூகக் கட்டமைப்பிலும் குற்றவியல் நீதிஅமைப்பு, சட்டங்கள், மற்றும் நீதிபரிபாலனத்திலும் உள்ள ஓட்டைகளை வெளிக் கொணர்கிறது. மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் இனவாத பாரபட்சம் மற்றும் வெறுப்புக்கு எதிராக சட்டம் இயற்ற முடியாதுதான். நமது கூட்டு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைகளில் பல லட்ச வேறுபட்ட தருணங்களில் பல லட்ச வேறுபட்ட வழிகளில் நாம் ஒரு சமூகமாக முன்னெடுக்க வேண்டிய ஒரு போராட்டம் அது. ஆனால் பலவீனமானவர்களுக்கு நீதியை உறுதி செய்ய சட்டம் இயற்ற முடியும், இயற்ற வேண்டும்.

நழுவிப் போகும் நீதி

இந்தியாவின் சமீபத்திய வரலாற்றின் வேறு எந்த வன்முறை நிகழ்வையும் போலல்லாமல், குஜராத் 2002 நமது ஜனநாயக நிறுவனங்கள் பலவற்றின் வலிமையையும் தாங்கும் தன்மையையும் சோதித்தது – தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, கெளரவத்துக்குரிய உச்ச நீதிமன்றம், மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம். ஒவ்வொன்றும் முன் வந்து நடவடிக்கை எடுத்தன. இருப்பினும், எப்படியோ, குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களை நீதி என்ற விஷயம் இன்னும் எட்டவில்லை.
சட்டத்தின் செயல்பாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம் என்பதை நிலைநாட்ட, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்பிழைத்தவர்கள் நமக்கு அறைகூவல் விடுக்கிறார்கள். அரசாங்கத்தின் நிறுவனமயமான பாரபட்சத்துக்கு ஒரு சட்ட நிவாரணம் உருவாக்க; கையில் கத்திகளோடு பிடிபடாத, ஆனால் மற்றவர்களை பொய் சொல்லவும் கொல்லவும் தேர்தல் ஆதாயங்களுக்காக சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தவும் தூண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம், தண்டனைச் சட்ட பொறுப்புகளை உறுதி செய்ய மீண்டும் மீண்டும் தவறிய நமது சட்டங்களிலும் நீதி பரிபாலனத்திலும் உள்ள இடைவெளிகளை நிரப்ப நமக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.  இதை சரிவர செய்து முடிப்பது, நீதிக்கும் சட்டத்துக்கு முன்பு சமத்துவத்துக்கான நமது அரசியலமைப்பு வாக்குறுதியை கண்டெடுக்க, இதுவரை இருப்பதை விட சிறப்பாக உதவும். நீதி இல்லாமல், நாம் நகர்ந்து செல்ல முடியாது.

உயிர்தப்பிய ஒருவரின் தைரியம்

ஜனவரி 12, 2008ல் பேச முடியாததை பேசுவதற்கான தைரியத்தைக் கொண்டிருந்த, 20 நாட்களுக்கு மேலான கடுமையான குறுக்கு விசாரணையை தாங்கிக் கொண்ட பில்கிஸ் பானோ என்ற குஜராத் தப்பிப் பிழைத்தவர் சிறிதளவு நீதியை பெற்றார். 2002ன் கொடூரமான நாட்களின் போது அவரை கும்பலாக பாலியல் வன்முறை செய்த, அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை கொல்லவும் பாலியல் வன்முறைக்குட்படுத்தவும், அவரது மூன்று-வயது-மகளை தரையில் அடித்து சிதறடிக்கவும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியது.
ஜனவரி 21, 2008 அன்று தில்லியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பில்கிஸ் இந்த அறிக்கையை வெளியிட்டார்:
“கடந்த ஆறு வருடங்களாக நான் பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். என் குழந்தைகளையும் சுமந்து கொண்டு ஒரு தற்காலிக இல்லத்திலிருந்து இன்னொன்றுக்கு அல்லாடிக் கொண்டிருந்தேன். இத்தனை மக்களின் மனங்களில் இன்னமும் இருக்கும் வெறுப்பிலிருந்து அவர்களை பாதுகாக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். இந்த தீர்ப்பு அந்த வெறுப்புக்கு முடிவு கட்டி விடப் போவதில்லைதான், ஆனால் எங்காவது, எப்படியாவது நீதி நிலைநாட்டப்படும் என்பதை அது உணர்த்துகிறது. இந்த தீர்ப்பு எனக்கு மட்டுமின்றி கொல்லப்பட்ட எல்லா அப்பாவி முஸ்லீம்களுக்கும் என்னைப் போன்று முஸ்லீமாக இருந்ததாலேயே உடல்ரீதியாக மீறப்பட்ட எல்லா முஸ்லீம் பெண்களுக்குமான வெற்றியாகும். இதற்குப் பிறகு 2002ன் அந்த பயங்கரமான நாட்களில் குஜராத்தின் பெண்களுக்கு என்ன நடந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதால் இது ஒரு வெற்றி. ஏனென்றால், குஜராத்தின் வரலாற்றுப் பதிவுகளில் பாலியல் வன்முறை எங்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்று அழிக்க முடியாமல் பதிக்கப்பட்டு விட்டது. குஜராத் மக்கள் அந்த வன்முறை மற்றும் வெறுப்புணர்வின் களங்கத்துடன் வாழ முடியாமல் என்றாவது ஒரு நாள் இன்னும் எனது தாய்வீடாக திகழும் மாநிலத்தின் மண்ணிலிருந்தே அதை வேரோடு பிடுங்கி எறிந்து விட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.”
குஜராத்தில் நீதிக்கான போராட்டத்தை நமது சொந்த அபாயத்தில்தான் நாம் கைவிட வேண்டும். குஜராத்தை கைவிடுவதன் மூலம் நாம் ஒரு சிறந்த இந்தியாவை, ‘இந்தியா நம் ஒவ்வொருவருக்கும் உரிமையுள்ள வீடு’ என்ற நம்பிக்கையை கைவிடுகிறோம்.
_________________________________________________________________
- பாரா நக்வி,
நன்றி: தி ஹிந்து

தமிழாக்கம்: செழியன்

கருத்துகள் இல்லை: