வெள்ளி, 10 ஜூன், 2011

839 புலி உறுப்பினர்கள் மாத்திரமே முகாம்களில்

ltte-508
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான தற்காலத்தில் 839 புலி உறுப்பினர்கள் மூன்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நேற்று சபையில் அறிவித்த அரசாங்கம் இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தது. இதேவேளை, மூன்று முகாம்களை மாத்திரமே குறிப்பிட்டு 839 புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கம் கூறுமானால் திருகோணமலை, வெலிகந்தை ஆகிய முகாம்கள் தடுப்பு முகாம்கள் இல்லையா? 839 பேர் தான் எஞ்சியுள்ளனர் எனில் ஏனையோர் எங்கே? அரசாங்கம் இதனைப் பொறுப்புடன்தான் வெளிப்படுத்துகின்றதா என்று ஜே.வி.பி. கேள்வியெழுப்பியது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திசாநாயக்கவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை குற்றப் பத்திரிகை தாக்கல், தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த முகாம்கள் என்றே கேள்வியெழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன,பூசா, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய மூன்று தடுப்பு முகாம்களில் 839 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது இடைக்கேள்வியொன்றைத் தொடுத்த அனுரகுமார எம்.பி., கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் என்று கூறியது. பின்னர் 12,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னர் 8000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியது. ஆனாலும் இன்று இந்த சபையில் 839 பேரே மூன்று தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றது. அவ்வாறெனில் வெலிக்கந்தை திருகோணமலையில் அமைந்திருப்பவை தடுப்பு முகாம்கள் இல்லையா? எனக் கேட்கிறேன். இங்கு நான் தடுப்பு முகாம்கள் குறித்தே கேள்வியெழுப்பியிருக்கிறேன் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின்போது 2 இலட்சத்து 85 ஆயிரம் பேர் அரச தரப்பு பக்கத்திற்கு வந்தனர். இவர்களை நாம் முகாம்களில் வைத்தே பராமரித்தோம் என்றார்.
இதனையடுத்து குறுக்கிட்ட அனுரகுமார எம்.பி. தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்கள் தொடர்பிலேயே இங்கு கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் கூறுவது போல் 839 பேரே மேற்படி முகாம்களில் உள்ளனர் என்றால் இதுவரை காலமும் கூறி வந்த ஏனைய எண்ணிக்கையிலானோர் எங்கே? அரசாங்கம் கூறுவதில் எது உண்மை எனக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே இங்கு நான் பதிலளித்துள்ளேன். இது முற்றிலும் உண்மையானதாகும். கடந்த காலங்களில் இந்நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள்தான் இன்று புலி உறுப்பினர்களுக்காக கேள்வி எழுப்புகின்றனர்.
புலிகளாக இனங்காணப்பட்டவர்களை தடுப்பு முகாம்களிலேயே வைத்திருப்பதற்கு எண்ணம் இல்லை. அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டு அவர்கள் தொழில் புரிகின்றனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இதன்போது மேலுமொரு இடைக் கேள்வியைத் தொடுத்த அனுரகுமார எம்.பி., முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு மொழிப் பிரச்சினை இருக்கின்றது. அவர்களுக்கு தமிழ் மொழியில் மாத்திரமே பரீச்சயம் இருக்கின்றது. இந்நிலையில் குறித்த புலி உறுப்பினர்கள் விசாரணைக்குட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளின்போது சிங்கள மொழியே பெரிதும் பாவனையில் உள்ளது. அண்மையில் பொரளை சிறையில் தமிழ் இளைஞர் ஒருவரை சந்தித்தேன்.

அவரது பிரச்சினை என்னவெனில், அவர் நீதிமன்ற விசாரணைகளுக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அவருக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் அது குறித்து குறித்த அந்த தமிழ் இளைஞர் விளங்கிக் கொண்டிருக்கவில்லை. தான் விடுதலை செய்யப்பட்டதாகவே உணர்ந்த அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னரே தனக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. எனவே இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைப்பதை நோக்காகக் கொண்டு இவ்வாறானவர்களை விசாரணைக்குட்படுத்தும்போது நீதித்துறையில் தமிழ் மொழி மூலம் விசாரணைக்குட்படுத்துவதற்கான திட்டங்களை ஏற்படுத்த முடியுமா எனக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தீர்ப்பளிக்கப்படுகின்றவர் சார்பில் தெளிவுபடுத்தல்களை கோர முடியும். அத்துடன் அவரது சட்டத்தரணிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பர். இது நீதித்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  எனவே அனுரகுமார எம்.பி. கூறுவதனை ஏற்க முடியாது என்றார். இதேவேளை, குறுக்கிட்ட அனுரகுமார எம்.பி. தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் தொடர்பில் அரசு கூறுவதில் நம்பிக்கையில்லை என்றார்.

கருத்துகள் இல்லை: