செவ்வாய், 7 ஜூன், 2011

ரேமெடியஸ் முடியப்பு இன்னும் கட்சி தாவவில்லை முந்திய தகவல் தவறானது

றெமிடியஸ் உட்பட எட்டுப் பேரும் ஓரணியில் செயற்படுவர்

யாழ். மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் றெமிடியஸ் உட்பட எட்டுப் பேரும் ஓரணியில் செயற்படுவர் என்று நேற்று உறுதியளித்துள்ளனர்.

மாநகரசபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களில் முடியப்பு றெமிடியஸ் தவிர்ந்த ஏனையோர் ஓரணியில் செயற்படுவதாக வெளிவந்த தகவல்களை அடுத்து கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் இணைச் செயலாளருமான மாவை சேனாதிராசா தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.இந்தக் கூட்டத்தை அடுத்து சபையின் உறுப்பினர்கள் எட்டுப் பேரினதும் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

* கலந்தாலோசனையை மாவை சேனாதிராசா ஆரம்பித்து வைத்து, கடந்த 6 மாதங்களாக மாநகர சபையில் நடைபெற்று வரும் விடயங்கள் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒரே அணியாகச் செயற் படாதமை போன்ற தோற்றப்பாடு பத்திரிகைச் செய்திகள் மூலம் வெளிவருவது மிகவும் வேதனையளிப்பதாகத் தெரிவித்தார்.

* அதைத் தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர்களை மனந்திறந்து கருத்தைத் தெரிவிக்கும்படி கேட்கப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

* உறுப் பினரான றெமிடியஸ், ஏனைய 6 உறுப்பினர்களும் தமக்கு எதிராகச் செயற்படுகின்றனர் என்றும் அதனால் சங்கடம் ஏற்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

* தொடர்ந்து உறுப்பினர் விந்தன் முரண்பாடுகள் ஏற்பட்ட மைக்கான காரணங்களை விளக் கினார்.

* கடந்த சனிக்கிழமை மாநகரசபையில் நடைபெற்ற கலந்து ரையாடலில் றெமிடியஸ் கலந்து கொண்டு, அரசு சார்பு கட்சிகளுடன் சேர்ந்து நிஷாந்தனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கையொப்பமிட்டதாகக் கூறப்பட்டதை அவர் (றெமிடியஸ்) மறுத்து தாம் அவ்வாறு செய்ய வில்லையெனத் தெரிவித்தார். கடந்த காலத்தில் சில பத்திரிகைகள் தமக்கு எதிராகச் செய்திகள் வெளியிட்டு வந்தமை தமக்குக் கவலையளிப் பதாகத் தெரிவித்தார்.

* மாநகர சபை ஏற்பாடு செய்த 2010ஆம் ஆண்டின் ஒளிவிழாவைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக் கணித்தபோது, றெமிடியஸ் கலந்துகொண்டமையே முரண்பாட்டுக்கு வித்திட்டது என விந்தன், பரஞ்சோதி, திருமதி மேரியம்மா ஆகியோர் தெரிவித்தனர். எங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆளும் தரப்பினர் செயற்பட வாய்ப்பளிக்கப்பட்டமை கவலைக்குரியது எனத் தெரிவித்தனர்.

* நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவின் ஆலோசனைக்கமைய, கூட்டமைப்பு மாநகரசபை உறுப்பினர்கள் எட்டுப்பேரும் ஒரே அணியாக ஒற்றுமையாக எமது இலட்சியங்களுக்கமைய செயற்படுவதாக உறுதியளித்தனர் என்றுள்ளது.

கருத்துகள் இல்லை: