சனி, 11 ஜூன், 2011

சமச்சீர் கல்வி: ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்?

சென்னை: திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்த அதிமுக அரசின் சட்ட திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையே தொடரப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை முந்தைய திமுக அரசு அறிமுகம் செய்தது, இந்தாண்டுக்கான பாடப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன.

ஆனால், இந்த பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி சமீபத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் சட்டத் திருத்தம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக தாக்கலான வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது என்றும், சமச்சீர் கல்வி முறையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் தமிழகத்தில் மீண்டும் சமச்சீர் கல்வி முறையையே அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச்சில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்காக அரசு வழக்கறிஞர்கள் நேற்றே டெல்லி விரைந்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று காலை டெல்லி சென்றார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு-ராமதாஸ் வரவேற்பு:

இந் நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைகள் இருந்தாலும் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே அதில் உள்ள குறைகளை படிப்படியாகக் களைய வேண்டும் என்றுதான் பாமக வலியுறுத்தி வந்தது. சென்னை உயர்நீதிமன்றமும் அதன் இடைக்காலத் தீர்ப்பில் இதையே தெரிவித்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பை கெளரவம் பார்க்காமல் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

English summary
Follow the Madras High Court's stay on the operation of an amendment to the Tamil Nadu Uniform System of School Education Act, the government is planning to appeal in SC against the order

கருத்துகள் இல்லை: