வியாழன், 9 ஜூன், 2011

300 இலங்கையர்களை 16 ஆம் திகதி நாடு கடத்த பிரிட்டன் தீர்மானம்


சுமார் 300 இலங்கையர்கள் பிரிட்டனிலிருந்து எதிர்வரும் 16ஆம் திகதி நாடு கடத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் 300இலங்கையர்களை பிரிட்டனிலிருந்து வெளியேற்றுவதற்காக பிரிட்டனின் எல்லை முகவரகம் விசேட விமானமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக பிரித்தானிய வட்டாரங்கள் தமிழ் மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன. பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை வழக்குரைஞரான நிஷான் பரம்ஜோதி இது தொடர்பாக தமிழ் மிரருக்குத் தெரிவிக்கையில் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கும் பிரித்தானிய எல்லை முகவரகத்தினால் இந்த வெளியேற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் எனத் தெரிய வருவதாகவும் அவர் தமிழ் மிரருக்கத் தெரிவித்தார்.  தம்மை நாடுகடத்துவதிலிருந்து தடுப்பதற்கு கடைசிநேர பிரயத்தனங்களில் மேற்படி இலங்கையர்கள் ஈடுபட்டுள்ளனர்.  எனினும் மேற்படி விமானம் ஜூன் 16 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு பிரிட்டனிலிருந்து புறப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1980 களின் முற்பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் பிரிட்டனுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். கனடாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையான புலம்பெயர்ந்த தமிழர்களை கொண்ட நாடாக பிரிட்டன் உள்ளது. அங்கு சுமார் 120,000 இலங்கைத் தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: