செவ்வாய், 7 ஜூன், 2011

சின்னராசா, கனடாவில், ‘மதகுரு’ போர்வையில் பயங்கரவாத அமைப்புக்காக

இது கனடாவிலுள்ள ஒரு ‘ராசா’ விவகாரமாம்!
- கேசவன் (கனடா)
இவ்வருடம் மே 11ம் திகதி சென்னையிலிருந்து கொழும்பு துறைமுகத்தினூடாக கனடாவுக்கு அனுப்பப்பட்ட பெருந்தொகை புத்தகங்களை இலங்கை அரசாங்கம் பறிமுதல் செய்தது பற்றிய தகவல்களை, கொழும்பிலிருந்து வெளியாகும் ‘த ஐலன்ட்’ நாளிதழ் தனது ஜூன் 06ம் திகதிய பதிப்பில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
‘ஐலன்ட்’ தகவல்களின்படி 1400 தொகை கொண்ட இந்தப் புத்தகங்களில், இலங்கை இராணுவம் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது மேற்கொண்ட நடவடிக்கைகளை அவதூறு செய்து பல கட்டுரைகள் அடங்கியுள்ளதாக தெரிய வருகின்றது. மேலும் இந்தப் புத்தகப்பொதி கனடாவில் இயங்கிவரும் புலிகளின் துணை அமைப்புகளில் ஒன்றான ‘தமிழீழ சங்கம்’ என்ற அமைப்பின் பொறுப்பாளரான அன்ரன் பிலிப் சின்னராசா (ஃபாதர் சின்னராசா) என்பவருக்கு முகவரியிடப்பட்டிருந்ததாகவும் ‘ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த சின்னராசா என்ற நபர், 1981 ஆண்டு புலிகளால் நீர்வேலியில் கொள்ளையடித்த வங்கிப்பணத்தை மறைத்து வைப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, மட்டக்களப்பு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் பின்னர் அச்சிறை 1983 ஆண்டு உடைப்புக்குள்ளானபோது தப்பிச் சென்றவர்களில் இவரும் ஒருவர் என்றும், அவர் நோர்வேக்கு தப்பிச் சென்று அங்கு புகலிடம் வழங்கப்பட்டு, பின்னர் கனடா சென்று புலிகளுக்கு ஆதரவாகத் தீவிரமாகச் செயற்பட்டு வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவர் திருமணம் முடித்துள்ளதும் புலிகளின் ஒரு தீவிர பெண் செயற்பாட்டாளரை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்துள்ள கனடாவில், ‘மதகுரு’ என்ற போர்வையில் இருந்து கொண்டு, அந்தப் பயங்கரவாத அமைப்புக்காக செயற்பட்டு வரும் சின்னராசா போன்றவர்கள் மீது, கனடிய அரசு ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றது என்று இங்குள்ள தமிழ் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிலும் சின்னராசா நடாத்தி வரும் புலிகளின் துணை அமைப்பான தமிழீழச் சங்கத்துக்கு, கனடிய குடிவரவு திணைக்களத்தின் நிதியுதவி கிடைத்து வருகின்றது என்ற இன்னொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: