வியாழன், 9 ஜூன், 2011

யாழ் மரக்கறிக்கு மவுசு குறைகிறது தம்புள்ளைக்கு செல்லும் லாரிகளின் தொகை வீழ்ச்சி

யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ள பொருளாதார மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும் மரக்கறி வகைகளின் தொகைகள் 70 வீதம் வரை குறைவடைந்து

யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ள பொருளாதார மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும் மரக்கறி வகைகளின் தொகைகள் 70 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மழைக்காலத்தை அடுத்து மரக் கறிகளின் உற்பத்தி குறைவடைந்தமை, நியாயமான விலைகள் தமக்குக்கிடைக் காமை மற்றும் இவற்றை எடுத்துச் செல்லும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாக தம்புள்ளக்கு மரக்கறி வகைகளைக் கொண்டு செல் வதைத் தாம் குறைத்துக் கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சின்னவெங்காயம், பீற்றூட், பூசணிக்காய், கத்தரிக்காய், கறிமிளகாய், பச்சை மிளகாய் போன்ற மரக்கறி வகைகள் யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளக்கு எடுத்து வரப்பட்டன எனவும் தற்போது மூன்று அல்லது நான்கு லொறிகளில் மட்டுமே யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகள் தம்புள்ளக்குக் கொண்டு வரப்படுவதாகவும் இதற்கு முன்னர் பதினைந்து இருபது லொறிகளுக்கு மேல் யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகள் தம்புள்ளக்கு எடுத்து வரப்பட்டன எனவும் தம்புள்ள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.முன்னர் மரக்கறி மூடையொன்றை தம்புள்ளக்குக் கொண்டு செல்வதற்கு நூறு முதல் நூற்றி இருபது ரூபா வரை கட்டணம் அறவிடப்பட்டது.

ஆனால் தற்போது அக் கட்டணம் நூற்று ஐம்பது முதல் நூற்றி அறுபது ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் யாழ்ப்பாண விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலைப்பாட்டின் காரணமாக தற்போது யாழ்ப்பாண விவசாயிகள் தமது விளைச்சல்களை குறைந்த விலை மட்டங்களுக்கு உள்ளூர் சந்தைகளுக்கே சந்தைப்படுத்த முனைந்துள்ளதாகவும், வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் வர்த்தகர்கள் தோட்டங்களுக்குச் சென்று அவற்றைக் கொள்வனவு செய்து வருவதாகவும் அறியமுடிகிறது.
 

கருத்துகள் இல்லை: