திங்கள், 5 ஆகஸ்ட், 2019

ஸ்டாலின் : ஜம்மு-காஷ்மீரின் ஒப்புதலை பெறாமல் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது ஜனநாயக படுகொலை

தினகரன் : சென்னை: ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும்
முயற்சி கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு படிப்படியாக  ராணுவத்தை குவித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். தொடர்ச்சியாக இன்று காலை 6 மணி முதல் ஜம்மு-காஷ்மீர் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும்வரை 144 தடை அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று முடிவடைந்தது. கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து முக்கிய  முடிவுகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து அறிக்கை வெளியிட்டார்.

அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவதற்கு காங்கிரஸ், திமுக  உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீரின் ஒப்புதலை பெறாமல் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார். இந்த ஜனநாயக படுகொலைக்கு அதிமுக துணை போயிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: