புதன், 7 ஆகஸ்ட், 2019

இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கரு.ஜெயசூரியா ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ... ரணில் பிரதமர் வேட்பாளர் ..

  veerakesari :ஐ.தே.முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகச் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அதன்படி கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராகவும் ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடவுள்ளதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடவுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய அதற்கான பிரசார வேலைகளை மறைமுகமாக ஆரம்பித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக போட்டோஷ_ட் பலவற்றில் அவர் கலந்துகொண்டதோடு, அத்தனகல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதி மற்றும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி ஆகியவற்றில் நடந்த போட்டோஷ_ட்களிலும் சபாநாயகர் கரு கலந்துகொண்ட நிலையில் குறித்த படங்கள் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதேபோல நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கும் சபாநாயகர் செல்லவுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதோடு,
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகி அவர் சுயாதீன ஒருவராகப் போட்டியிடவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகுமாறு பிரதமர் ரணில் கேட்டுக் கொண்டதை அடுத்தே இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னதாக கடந்த அரசியல் நெருக்கடி கடந்த வருடம் ஏற்பட்டபோது கரு ஜயசூரிய அதனை மிக இலாவகமாக கையாண்டதால் அவருக்கு அனுபவ முதிர்ச்சியும் அரசியல் ஞானமும் இருப்பதாக பிரதமர் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: