புதன், 7 ஆகஸ்ட், 2019

வைகோ பாஜகவை விட காங்கிரசையே குறிவைப்பது ஏன்? பாஜகவிடம் ஒரு மென்மையான் (soft corner ) அணுகுமுறை?

இரா.முருகானந்தம்.:  அன்புள்ள திரு.வை.கோ ; வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன்
சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்..
பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தரப்புகளின் முரணியக்கமாக காண்பவன். அந்த வகையில் அண்ணா ஈ.வி.கே.சம்பத் ஆகியோருக்கு அடுத்து திராவிட இயக்கத்தின் ஆகச்சிறந்த நாடாளுமன்றவாதி நீங்கள்தான் என்பதில் இப்போதும் பெரிய மாறுபாடு இல்லை. எது உங்கள் அசல் ஆளுமையோ அதாகவே எஞ்சி இப்போது மாநிலங்களவைக்குள் நுழைந்திருக்கிறீர்கள்.. இந்த முறை நீங்கள் கட்டாயம் மாநிலங்களவைக்கு போக வேண்டும் என நான் மனதார விரும்பினேன். தமிழ்நாட்டின் உரிமைகள் என நீங்கள் முன்வைக்கும் விசயங்களுக்கும் நான் கருதும் விசயங்களுக்கும் சில மாறுபாடுகள் உண்டுதான்.. ஆனாலும்கூட ஒரு ஒப்புக்கொள்ளத்தக்க பொதுப்புள்ளிகள் இருக்கவே செய்கின்றன என்பதால் தமிழ்ச்சமூகத்தின் குரலாக ஒலிக்கும் அதிகபட்ச சாத்தியங்களை கொண்டவர் என்கிற வகையில் எனது சாய்ஸ் நீங்கள்தான்..
காஷ்மீர் பிரிவினை தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உங்கள் உரையை மிக ஆர்வத்துடன் எதிர்நோக்கினேன். நீங்கள் பேச மூன்று நிமிடம் வழங்கிய அவையின் துணைத்தலைவர் நான் காங்கிரஸை விமர்சித்துப்பேச இருக்கிறேன் என கூற உடனே அமித்ஷா வின் வேண்டுகோளில் உங்களுக்கு பத்துநிமிடங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இவை அனைத்தும் தற்செயலான பெருந்தன்மை என நம்பினாலும் நீங்களும் சொன்னபடியே செய்தீர்கள். பத்தில் ஒன்பது நிமிடங்கள் காங்கிரஸையும் கடைசி சில விநாடிகள் அரசையும் குறைகூறி முடித்தீர்கள்.. நீங்கள் காங்கிரஸை விமர்சிப்பதோ, அதுவும் பாராளுமன்ற விவாதங்களில் ஒரு 360 டிகிரி பார்வையை முன்வைப்பதோ சாதாரணமானது என்பதை நான் அறிவேன்.. நீங்கள் கடந்தகால காங்கிரஸ் அரசுகள் காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்ததாக சொன்னீர்கள். அதில் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்கிற வாக்குறுதியை இந்திய அரசுத்தலைவரான நேரு மீறியதாகவும் அதுபற்றி ஐ.நாவுக்கான இந்திய தூதர் எம்.சி.சாக்ளா இரண்டு பொதுத்தேர்தல்கள் அங்கு நடத்தப்பட்டதால் அதுவே பொதுவாக்கெடுப்பு எனக்கூறி விட்டதாகவும் சொன்னீர்கள். முதலில் காஷ்மீரக்கான பொதுவாக்கெடுப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்கிற இருநாட்டு பகுதிகளைச்சேர்த்தே நடத்த முடியும்.. அந்த சூழல் இல்லாத.நிலையில் நேரு எப்படி இந்திய காஷ்மீருக்கு மட்டும் தனியாக பொதுவாக்கெடுப்பு நடத்த இயலும்..? சங்கிகள் எப்போதும் வரலாற்றின் புழக்கடையில் புழுப்பொறுக்குபவர்கள்.. அவர்களிடம் தர்க்க நியாயம் பேசுவதை விட முட்டாள்தனம் இருக்க இயலாது. ஆனால் நீங்களும் அதே பாணிதானா?
அடுத்து எம்.சி.சாக்ளா பேசியது ஒரு சர்வதேச மன்றத்தில். அந்தவகையில் அது அரசநயவாதம்.(Diplomatic Argument). அதற்கு அரசியல் நோக்கு கிடையாது.
அதன் பின் காஷ்மீர் பிரச்சனை பல நிலைகளை கடந்து வந்திருக்கிறது. சிம்லா ஒப்பந்தம், லாகூர் பேச்சுவார்த்தை என மாறிவந்த பல அரசுகளும் பல முயற்சிகளை மேற்கொண்டன.
மற்றபடி பரூக் அப்துல்லா உங்களிடம் தனிப்பட்ட முறையில் சொன்னதை அவர்தான் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியும். அது ஒருபுறம் இருக்கட்டும். மக்களவை உறுப்பினரான பரூக் அப்துல்லா சிறைவைக்கப்படவில்லை என உங்கள் நண்பரான அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசிய பொய்யை பரூக் அப்துல்லா தான் சிறைவைக்கப்பட்டதை ஊடகங்களிடம் வெளிப்படுத்தி காறி உமிழ்ந்த எச்சிலை துடைத்துக்கொண்டு அமித் ஷா செய்யும் அநியாயங்களை பேச சில விநாடிகள் போதும் என நீங்கள் முடிவிற்கு வந்ததன் காரணங்களை என்னால் எப்படியும் புரிந்துகொள்ள இயலவில்லை. நீங்கள் செய்வது மிகுந்த ஆபத்தான சவாரி..
நீங்கள் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வாக ஏழு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும் இருந்தது. உங்கள் கட்சியின் சார்பில் ஈரோடு மக்களவைத்தொகுதியில் போட்டியிட்ட திரு.அ.கணேசமூர்த்தி அவர்களின் வெற்றிக்கு நான் தேர்தல் பணியாற்றியிருக்கிறேன். இவை இதை எழுத போதுமான நியாயங்கள் என நினைக்கிறேன். நீங்கள் இன்றைய ஆட்சியாளர்களைப்பற்றி சாவகாசமாக பேசுகையில் நீங்கள் இடம்பெற்ற கூட்டணியிலிருக்கும் காங்கிரஸை Culprit என்கிற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது எந்த வகையான அரசியல் நெறிமுறை..?
ஒரு நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட நாவண்மை மிக்கவரான நீங்கள் சமநிலை தவறி இடறும் இந்த புள்ளியில்தான் நீங்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் அரசியல் தலைமையாகும் சாத்தியங்களை தவற விட்ட காரணிகள் இருக்கின்றன.
நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள் என்பதல்ல பிரச்சனை. எந்தச்சூழலில் அதைச்செய்கிறீர்கள் என்பதே பிரச்சனை..
இப்போதும்கூட உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீங்கள் இனி தடம் பிறழாமல் மதச்சார்பற்ற அரசியல் விழுமியங்களுக்காகவும் தமிழச்சமூகத்தின் நலனுக்காகவுமான பொருட்படுத்தக்க குரலாக இருப்பீர்கள்என. இது எனக்கல்ல.. காங்கிரஸிற்கல்ல.. உங்கள் ஆசான்கள் பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் சிந்தனைப்பள்ளியின் வார்ப்புதான் நீங்கள் என வரலாறு இறுதியாக உறுதிப்படுத்திக்கொள்வதற்காக..
அன்புடன்,
இரா.முருகானந்தம்.

கருத்துகள் இல்லை: